சர்வதேச எய்ட்ஸ் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த வருடம் ‘Putting Ourselves to the Test: Achieving Equity to End HIV’_’எம்மை நாம் பரிசோதனைக்கு உட்படுத்துவோம்: எய்ட்ஸை ஒழிக்க சமத்துவமாக ஒன்று திரள்வோம்’ எனும் தொனிப்பொருளில் சர்வதேச ரீதியில் எய்ட்ஸ் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
தேசிய எய்ட்ஸ் தடுப்பு திட்டத்தின் பணிப்பாளர் விஷேட வைத்தியர் ரசாஞ்சலி ஹெட்டியாரச்சியின் அறிக்கையிலிருந்து, இலங்கையில் இளம் வயதினர் மத்தியில் எய்ட்ஸ் நோய் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
உலக சுகாதார அமைப்பினால் எய்ட்ஸ் நோய் உலக பரவு நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. எய்ட்ஸ் (AIDS) என்பது Acquired immunodeficiency Syndrome என்ற தொடரின் சுருக்கமாகும். அதாவது தேடிப்பெற்ற நீர்ப்பீடனக் குறைபாடு நோய்த்தொகுதி என்பதாகும். HIV என்னும் வைரஸ் மூலமே இந்நோய் உருவாகிறது. எச்.ஐ.வி. வைரஸ் உடலினுள் புகுந்து வெண்குருதிக் கலங்களைத் தாக்கி நோய் எதிர்ப்பு சக்தியைப் பலவீனப்படுத்துகிறது. இதனால் எய்ட்ஸ் பீடிக்கப்பட்ட ஒருவர் நோயாளியாகிறார்.
எச்.ஐ.வி. வைரஸ் 3 வழிகளில் ஒருவருக்குக் கடத்தப்படலாம். அவையாவன 1. நோயுற்றவர்களுடன் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொள்ளுதல். 2. நோயாளரின் குருதியை மற்றையவருக்கு மாற்றுவதன்மூலம் அல்லது நோயாளி பாவித்த ஊசியை வேறுறொருவருக்கு பயன்படுத்துவதன் மூலம். 3. நோயுள்ள தாய் தன் கருவிலுள்ள குழந்தைக்குக் கடத்தல்.
இலங்கையில் முதலாவது எய்ட்ஸ் நோயாளி 1987 ஆம் ஆண்டு தொழில் நிமித்தம் நைஜீரியா சென்று நாடு திரும்பிய களுத்துறை மாவட்ட வாசியாவார். அவர் இனம் காணப்பட்டதை அடுத்து இலங்கை தம்மை உசார்படுத்திக் கொண்டது. அன்று தொடக்கம் 31.10.1997 வரை 76 பேர் எய்ட்ஸ் நோய்க்கு இலக்காகி, அவர்களில் 61 பேர் இறந்தனர். இவர்களில் ஆண்கள் 46 பேர், பெண்கள் 15 பேர் . 2012ஆம் ஆண்டில் இலங்கையில் எய்ட்ஸ் தொற்றினால் 1597 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 22 பேர் மரணமடைந்துள்ளதாகவும் தேசிய பாலியல் நோய் எய்ட்ஸ் தடுப்பு பிரிவு தெரிவித்திருந்தது.
தற்போது இலங்கையில் தொடர்ச்சியாக எச்.ஐ.வி. தொற்று அதிகரிப்பதற்கான காரணங்கள் குறித்த ஆய்வுகளின் போது, பாலியல் தொழிலாளர்களுக்கு ஊடாகவே நாட்டில் அதிகளவானவர்கள் எச்.ஐ.வி. தொற்றுக்கு ஆளாகிறார்கள் என்று தெரியவந்துள்ளது. அவர்கள் அவதானத்துடன் நோக்கப்பட வேண்டியவர்கள் என்று எச்.ஐ.வி – எய்ட்ஸ் ஒழிப்பு அமைப்பின் அதிகாரி ஒரவர் தெரிவித்தார். இலங்கையில் ஆயிரக்கணக்கில் பெண் பாலியல் தொழிலாளர்கள் உள்ளதாக எச்.ஐ.வி – எய்ட்ஸ் ஒழிப்பு அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. புள்ளிவிபர முடிவுகளின்படி உலக சனத்தொகையில் சுமார் 3 கோடி 80 இலட்சம் மக்களுக்கு மேல் எச். ஐ. வி. தொற்றுடன் வாழ்ந்து வருகின்றார்கள். உலகத்தில் தென் ஆபிரிக்காவே அதிகளவில் எச்.ஐ.வி. நோயாளிகளைக் கொண்டிருக்கின்றது. இதைத் தொடர்ந்து நைஜீரியாவும் இந்தியாவும் உள்ளன. இலங்கையில் எச்.ஐ.வி உடன் 4000 இற்கும் அதிகமானோர் வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால் 2900 பேர் மாத்திரமே சிகிச்சை பெறுகின்றனர். எச்.ஐ.வி. தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ளவோ அல்லது, முழுமையாக மீள்வதற்கோ இன்னமும் தடுப்பு மருந்து பூரணமாக கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனாலும் உயிரியல் விஞ்ஞானிகள் அதற்கான தீர்வை நோக்கி வேகமாக பயணித்து வருகிறார்கள். எச்.ஐ.வியை எதிர்க்கும் திறன் கொண்ட நோய் எதிர்ப்பாற்றல் குருதியணுக்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பிரபல நோபல் பரிசு பெற்ற மருத்துவவியலாளர் டேவிட் பல்டிமோர் தமது பரிசோதனைகளை எலிகளில் நிகழ்த்திய போது அனுகூலங்களான முடிவுகள் பெறப்பட்டதாகக் கூறுகிறார். எய்ட்ஸ் நோய் உலகிற்கு ஓர் அச்சுறுத்தல். இந்நோயானது மரணத்தை ஏற்படுத்தக் கூடியது. இந்நோய் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதன் மூலமே முற்காப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லலாம்.
நோய்த்தடுப்பு யுத்திகள் நன்கறியப்பட்டுள்ள போதிலும், கணிசமான அளவு இளைஞர்கள் எச்.ஐ.வி, எய்ட்ஸ் பற்றிய அறிவைப் பெற்றிருந்த போதிலும், தாங்கள் எச்.ஐ.வி தொற்றுதலுக்காளாகும் அபாயத்தைக் குறைவாக மதிப்பிட்டு, பேராபத்து விளைவிக்கும் நடவடிக்கைளில் இறங்குகின்றனர் என எச்.ஐ.வி, எய்ட்ஸ் ஒழிப்பு அமைப்பு கூறுகின்றது.
பாலியல் தொழிலாலும் ஓரினச் சேர்க்கையாலும் இலங்கையில் எய்ட்ஸ் நோய் பரவுகின்றது. தற்போது 15, 16, 17 வயது மாணவர்களும் விபசாரத்தில் ஈடுபடுவதாகவும் தெரியவருகிறது. எதிர்காலங்களில் மாணவர்கள் மத்தியில் அதிகளவு எய்ட்ஸ் நோயாளிகள் உருவாகும் அபாயம் தோன்றியுள்ளது எனவும் அதிர்ச்சியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே பெற்றோர் இது விடயத்தில் கூடிய கவனம் எடுக்குமாறு வேண்டப்படுகின்றனர். சிறுவர்கள் ஆபாச படங்களை பார்ப்பதனால்தான் விபசாரத்திற்கு தள்ளப்படுகின்றனர். பெற்றோரும் ஆசிரியர்களும் மதவழிபாட்டு போதகர்களும் ஆபாச படங்களை பார்ப்பதிலிருந்து மாணவர்களை பாதுகாப்பதற்கான புத்திமதிகளை எடுத்துக் கூறி மாணவர் சமுதாயத்தை பாதுகாக்க முன்வர வேண்டும்.
கட்டுரையாளர் – கலாபூஷணம் பரீட் இக்பால்