தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை, தமிழ்த் தேசிய பேரவையின் அரசியல் குழுவினர் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.
எடப்பாடி பழனிச்சாமியுடனான சந்திப்பு நேற்று அவரது இல்லத்தில் இடம்பெற்றது.
இரவு 10.15 மணியளவில் ஆரம்பமாகிய சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஏக்கிய ராஜ்ய அரசியலமைப்பு நிராகரிப்பு, தமிழர் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை, அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கப்படல் வேண்டும், ஈழத்தமிழ் கடற்தொழிலாளர் பிரச்சினை தீர்க்கப்படல் வேண்டும் ஆகிய விடயங்கள் முக்கியமாக கலந்துரையாடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பேசப்பட்ட விடயங்கள் குறித்தும், எடுத்துக் கூறப்பட்டதுடன், எழுத்து மூலமான கோரிக்கையும் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனும் கலந்து கொண்டிருந்தார்.
தமிழ்த் தேசியப் பேரவை சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொ.ஐங்கரநேசன் , செ.கஜேந்திரன் , த.சுரேஸ் , க.சுகாஷ் , ந.காண்டீபன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.
அதேவேளை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானையும் தமிழ் தேசிய பேரவை அரசியல் குழுவினர் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.
சீமானின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.










