இரத்தினபுரி திருவெனாகெட்டிய பிரதேசத்தில் உள்ள கோனகும்புர எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊழியர்களை இனந்தெரியாதோர் தாக்கி இரண்டு இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர்.
இரு இனந்தெரியாத நபர்கள் கடந்த 31 ஆம் திகதி அதிகாலையில் எரிபொருள் நிலையத்துக்கு வந்து அங்கு சேவையில் ஈடுபட்டிருந்த ஊழியர்களை பொல்லினால் தாக்கி ஊழியர் ஒருவரின் கையை கத்தியால் வெட்டி காயப்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன் பின்னர் அவ்விருவரும் ஊழியர்களை பயமுறுத்தி இரண்டு இலட்சத்துக்கு அண்மித்த பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளதாக புகார் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவிலே கொள்ளையடிக்கும் சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்ய ஆரம்பகட்ட விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்தனர்.










