ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஏதேச்சாதிகார வழியில் பயணித்துக்கொண்டிருப்பதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
‘அரசாங்கத்தை விமர்சிக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக சேறுபூசும் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இதுகூட ஒருவகையிலான அரசியல் அழுத்தம்தான். இதற்கு நாம் அஞ்சமாட்டோம். அரசாங்கம் தவறிழைத்தால் அதனை முதுகெலும்புடன் சுட்டிக்காட்டுவோம்.
இந்த அரசாங்கம் ஏதேச்சாதிகார வழியில் பயணிப்பதற்கு முற்படுகின்றது. இதனை தடுப்பதற்கு முற்படும் அனைத்து தரப்பினரும் ஒடுக்கப்படுகின்றனர். இதனை நாட்டு மக்களும் விரைவில் புரிந்துகொள்வார்கள்.” – என்றார்.










