ஒரு சில தொழிற்சங்கங்களால் இந்நாட்டிலுள்ள ஒட்டுமொத்த அதிபர் – ஆசிரியர் சமூகத்தை ஆட்டுவிக்கமுடியாது. அரசால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்வு திட்டம் தொடர்பில் மேற்படி தொழிற்சங்கங்கள் தமக்கு தேவையான வகையிலேயே தகவல்களை பறிமாற்றியுள்ளன. உண்மை நிலைவரத்தை நாம் தெளிவுபடுத்திவிட்டோம். எனவே, ஒரு சில தொழிற்சங்கங்கள் என்ன முடிவை எடுத்தாலும், அதிபர், ஆசிரியர்கள் மாணவர்களுக்காக கல்வி நடவடிக்கையை முன்னெடுப்பார்கள் என நம்புகின்றோம்.
இவ்வாறு அதிபர் – ஆசிரியர் சேவைகளில் காணப்படும் சம்பள பிரச்சினைகளுக்கு தீர்வை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழு உறுப்பினரான அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது,
“ அமைச்சரவை உப குழுவால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்வை அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்கங்கள் நிராகரித்துள்ளன. அப்படியானால் அரசின் மாற்று நடவடிக்கை என்ன, ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மீள சேவைக்கு அழைக்கப்படுவார்களா” – என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ இல்லை. அரசால் வழங்கப்பட்டுள்ள தீர்வு தொடர்பில் ஒரு சில தொழிற்சங்கங்கள் தமக்கு தேவையான விதத்தில்தான் அதிபர், ஆசிரியர்களுக்கு தகவல்களை பறிமாற்றியுள்ளன. எனவேதான் இந்த ஊடக சந்திப்பை நடத்தி உண்மை நிலைவரத்தை தெளிவுபடுத்துகின்றோம். ஒரு சில தொழிற்சங்கங்களால் இந்நாட்டிலுள்ள அதிபர் – ஆசிரியர் சமூகத்தை ஆட்டுவிக்கமுடியாது. மனநிலைமையை மாற்றவும் முடியாது.
மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என்பதையே பெரும்பாலான அதிபர், ஆசிரியர்கள் விரும்புகின்றனர். அவ்வாறானவர்களுக்கும் நீதி கிடைக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாம் இருந்தோம். இன்னமும் இருக்கின்றோம். அதனால்தான் இரு வாரங்களுக்குள் அமைச்சரவைக்கு தீர்வு திட்டத்தை முன்வைத்தோம்.
இன்று நாம் தீர்வு திட்டம் தொடர்பில் உண்மை நிலைமையை தெளிவுபடுத்தியுள்ளோம். எனவே, சில தொழிற்சங்கங்கள் எத்தகைய முடிவை எடுத்தாலும், அந்த தீர்மானத்தை எதிர்த்தேனும் மாணவர்களின் கல்விக்காக அதிபர், ஆசிரியர்கள் முன்னிலையாவார்கள் என நம்புகின்றோம். எனவே, கலக்கமடைய வேண்டியதில்லை.” – என்றார்.
அதேவேளை, இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சர் விமல் மேலும் தெளிவுபடுத்துகையில்,
“ அதிபர் – ஆசிரியர் சேவைகளில் காணப்படும் சம்பள பிரச்சினை 24 வருடங்கள் பிரச்சினையாகும். இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என உறுதிமொழி சுபீட்சத்தின் எதிர்கால நோக்கு தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கப்பட்டிருந்தது. ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் அமைந்த எமது முதலாவது அரசில் கல்வி அமைச்சராக டலஸ் செயற்பட்டார். அவரும் அமைச்சரவை பத்திரங்களை முன்வைத்தார்.
எனினும், ஜனாதபதி பதவியேற்று மூன்று மாதங்களின் பின்னர் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் இலங்கையில் மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் பாதிப்புகள் ஏற்பட்டன. வருமான இழப்புகள் ஏற்பட்டன. எல்லா பிரச்சினைகளைவிடவும் சுகாதாரப் பிரச்சினைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டன. அதற்காக நிதிகள் ஒதுக்கப்பட்டன. தற்போதும் அதே நிலைமை காணப்படுகின்றது.
அப்படி இருந்தும் அதிபர், ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையை தீர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் ஊடாக அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். சம்பள விடயம் மட்டுமல்ல இதர யோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றை செயற்படுத்துவதற்கு 6 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளன.
வடக்கு பகுதியில் உள்ள மாணவர்கள் நிகழ்நிலை கல்வியை பெறுகின்றனர். கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை மாணவர்களும் பயன் அடைகின்றனர். தனியார் பாடசாலை மாணவர்களும் நிகழ்நிலை கல்வியை பெறுகின்றனர். ஒரு தரப்பு மாணவர்களுக்கு மட்டுமே அநீதி இழைக்கப்படுகின்றது. எனவே, தீர்வை ஏற்று ஆசிரியர் – அதிபர்கள் பணியை ஆரம்பிப்பார்கள் என நம்புகின்றோம்.” என்றார்.