இலங்கை–இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி கெளஹாத்தி அசாம் கிரிக்கெட் சங்க அரங்கில் இன்று (10) நடைபெறவுள்ளது.
இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் தோல்வியை சந்தித்த நிலையிலேயே இலங்கை அணி ஒருநாள் தொடரில் களமிறங்கவுள்ளது. அதிலும் இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 இல் சுர்யகுமார் யாதவ்வின் அதிரடிக்கு மத்தியில் இலங்கை அணி முழுமையாக சோபிக்கத்தவறியது.
எனினும் டி20இல் அணித்தலைவர் தசுன் சானக்க, சரித் அசலங்க மற்றும் குசல் மெண்டிஸ் துடுப்பாட்டத்தில் சோபித்ததோடு பந்துவீச்சில் கசுன் ராஜித்த, டில்ஷான் மதுசங்க ஆகியோர் சோபித்தனர். எனினும் அனுப துடுப்பட்ட வீரர் பானுக்க ராஜபக்ச ஒருநாள் தொடரில் உள்ளடக்கப்படாத நிலையில் அவிஷ்க பெர்னாண்டோ அவரது இடத்தில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டி20 தொடரில் இளம் அணியை களமிறக்கிய இந்தியா ஒருநாள் தொடரில் அனுபவ வீரர்களான அணித்தலைவர் ரோஹித் ஷர்மா, விராட் கொஹ்லி, கே.எல் ராகுல் ஆகியோரை அழைத்துள்ளது. இந்த ஆண்டில் இந்திய அணி சொந்த மண்ணில் ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில் அது முழு முயற்சியுடன் இந்த ஒருநாள் தொடரில் ஆட எதிர்பார்க்கும்.
மறுபுறம் உலகக் கிண்ணத்தை எதிர்நோக்கி இருப்பதால் இலங்கை அணிக்கும் இந்தத் தொடர் தீர்க்கமானதாக உள்ளது.
இன்றைய போட்டி பகலிரவு ஆட்டமாக இலங்கை நேரப்படி இன்று மாலை 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ரா நீக்கப்பட்டுள்ளார்.
உபாதையில் இருந்து மீண்டிருக்கும் அவரை மீண்டும் அணியில் இணைப்பதில் அவசரமில்லை என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. எனினும் பும்பரா முதல் ஒருநாள் போட்டிக்காக ஏற்கனவே கெளஹாத்தி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
