‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ – ஜனாதிபதி செயலணி எதற்காக? ஹக்கீம் வெளியிடும் பரபரப்பு தகவல்

‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ தொடர்பில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட செயலணிக்கு, கலகொட அத்தே ஞானசார தேரர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

கண்டி மாவட்டச் செயலகத்தில் நேற்று (28) மாலை நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

அரசாங்கத்தின் இச்செயல்பாடானது நாட்டில் அமைதியின்மை தொடர்வதற்கும் இனங்களுக்கிடையிலான மோதல்கள் அடிக்கடி நிகழ்வதற்கும் தூபமிடும் செயலாகவே அமைந்துள்ளதாகத் திட்டவட்டமாகக் கருதலாம்.

ஒரு சாராரைத் திருப்திப்படுத்துவதற்காகவே இவ்வாறு நடக்கின்றதென நம்புவதோடு, இதன் பின்னணியில் மறைகரங்களும், வெளிச்சக்திகளும் இருக்கலாம் என்ற நியாயமான சந்தேகம் மேலெழுவதும் இயல்பானதே.

அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்து, அதன் செல்வாக்கு சரிந்து வரும் காரணத்தினால், அரசாங்கத்தின் பலவீனத்தை மூடிமறைப்பதற்கும் மக்களின் கவனத்தை வேறு திசையில் திருப்புவதற்கும் இவ்வாறான கீழ்த்தரமான அணுகுமுறைகள் கையாளப்பட்டு வருவது கண்கூடாகும்.

அத்துடன் பிரஸ்தாப செயலணியில் தமிழ் மக்களின் சார்பிலோ, கிறிஸ்தவர்கள் சார்பிலோ எவருமே உள்வாங்கப்படாததும் ஒரு பாரிய குறைபாடாகும்.

இலங்கை முஸ்லிம்களின் அதிகபட்ச ஆணையை பெற்ற அரசியல் கட்சியின் தலைவர் என்ற முறையிலும், நாட்டில் வாழும் சகல இனங்களுக்கு இடையிலும் ஒற்றுமையும் நல்லுணர்வும் நிலவ வேண்டும் என்று நேசிக்கும் பிரஜை என்ற முறையிலும் எனது கண்டனத்தை இந்தச் சந்தர்ப்பத்தில் மிகவும் வன்மையாகப் பதிவு செய்கின்றேன்.

அரசாங்கத்தின் குறுகிய நோக்கம் கொண்ட இந்த நடவடிக்கையானது குறிப்பாக முஸ்லிம் நாடுகள் மத்தியிலும், பொதுவாக சமாதானத்தை விரும்பும் உலக நாடுகள் மத்தியிலும் இலங்கை ஏற்கனவே வெறுப்பை சம்பாதித்துள்ள நிலையில், நாட்டின் நற்பெயருக்கு பாரிய களங்கத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை என தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles