” கஜேந்திரகுமார் எம்.பி. அச்சுறுத்தப்பட்டமை அடக்குமுறையின் உச்சகட்டம்”

“யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மருதங்கேணிப் பகுதியில், பொதுமக்கள் முன்னிலையில் அரச புலனாய்வாளர்களால் ஆயுத முனையில் அச்சுறுத்தப்பட்டுள்ளமை இந்த நாட்டின் அதியுச்ச அடக்குமுறையையே காட்டி நிற்கின்றது.”

– இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,“இந்த நாட்டின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் மீது ஆயுதமுனையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அச்சுறுத்தலானது, சாதாரண தமிழ் மக்களின் இயல்பு வாழ்வில் இராணுவம் மற்றும் அரச புலனாய்வாளர்களால் எத்தகைய அச்சுறுத்தல்கள் ஏற்படக்கூடும் என்பதை மிகத் தெளிவாகக் காட்டியிருக்கிறது.

மக்கள் பிரதிநிதியான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்குரிய சிறப்புரிமையை மீறி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது பகிரங்கமாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தக் கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துவதோடு, இந்தச் சம்பவத்துக்கு எனது வன்மையான கண்டனங்களையும் பதிவு செய்கின்றேன்.” – என்றார்.

Related Articles

Latest Articles