கடன் மறுசீரமைப்பில் இணங்க மறுக்கும் சீனா பொறிவைக்க காத்திருக்கிறதா?

இலங்கையில் அனைத்திற்கும் வரிசை என்ற யுகம் மாறி, மக்கள் சாதாரணமாக தமது பணிகளை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் அடிப்படை பிரச்சினை அப்படியே இருக்கிறது. இலங்கையின் பொருளாதாரம் அதளபாதாளத்தில் வீழ்ந்துள்ளது. பொருளாதாரத்தின் வீழ்ச்சி தடுக்கப்பட்டுள்ளது. வீழ்ந்துள்ள பொருளாதாரத்தை இனி கட்டியெழுப்ப வேண்டும். அதற்கு சிறந்த அடித்தளம் வேண்டும். இதற்கு நட்பு நாடுகள் உள்ளிட்ட சர்வதேசத்தின் உதவிகள் வேண்டும். இதனை நோக்கியே இலங்கை தற்போது தனது முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.

அந்நியச் செலாவணியை அதிகரித்துக் கொள்வதற்கும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துக் கொள்வதற்கும் முயற்சிகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இதற்கு இலங்கை மீது நம்பிக்கை ஏற்பட வேண்டும். அடிப்படை விடயங்கள் கட்டமைக்கப்பட வேண்டும். இந்த இரண்டு விடயங்களை செய்வதற்காகவே சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை இலங்கை எதிர்பார்த்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் உதவத் தயாராகியுள்ளது. சர்வசேத நாணய நிதியம் விதித்துள்ள நிபந்தனைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்கு இலங்கை முயற்சித்து வருகிறது. குறிப்பாக கடன் மீள் செலுத்துவதை மறுசீரமைக்க வேண்டும் என்பதே பிரதான நிபந்தனையாகும். இதற்கு ஜப்பான், இந்தியா ஆகிய நட்பு நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன. ஆனால் சீனா மட்டும் இதற்கு இணங்க தொடர்ந்து மறுத்து வருகிறது.

என்ன நடந்தது? என்ன நடக்கிறது?

2022ஆம் ஆண்டு இலங்கை மிகப் பெரிய நெருக்கடியை எதிர்கொண்டது. பல மணி நேர மின் வெட்டு, உணவுக்கு வரிசை, எரிபொருளுக்கு வரிசை என சொல்லணாத் துன்பங்களை மக்கள் அனுபவித்தனர். மக்கள் போராட்டம் வெடித்தது. அதிகாரத்தில் இருந்த ஆட்சியாளர் விரட்டப்பட்டார். அரசியலமைப்பின்படி புதிய ஜனாதிபதி பதவிக்கு வந்தார். வரிசைகள் குறைந்த போதிலும், பிரச்சினைகள் அப்படியே இருக்கின்றன. இந்த நிலையில் இருந்து ஒரே இரவில் விடுபடவோ, அனைத்தையும் மாற்றிவிடவோ முடியாது என்பதை அனைவரும் அறிவர்.

ஆனால் நீண்டநாள் திட்டத்துடன் இதிலிருந்து விடுபட முடியும். முன்நோக்கிப் பயணிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் ஜனாதிபதி பதவியில் அமர்ந்த ரணில் விக்ரமசிங்க தனது நகர்வுகளை ஆரம்பித்தார்.

இலங்கை பொருளாதார நெருக்கடியை சந்திக்கப் போகிறது என்பதையும், அதில் இருந்து மீள்வதற்கான வழி என்ன என்பதையும் ரணில் விக்ரமசிங்க, பதவிக்கு வருவதற்கு முன்னரே, அதாவது சுமார் ஒருவருடத்திற்கு முன்னர் இருந்தே கூறிவந்தார். ரணில் விக்ரமசிங்க வலியுறுத்திய முதன்மையான விடயம் ஐ.எம்.எப். என்ற சர்வதேச நாணய நிதியம். ஐ.எம்.எப். உதவியின்றி இலங்கையால் பயணிக்க முடியாது என்பதை வலியுறுத்தி வந்தார். ஆனால் கடந்த கால ஆட்சியாளர்களின் பிடிவாதமும், பிழையான தீர்மானங்களும் அந்த தெரிவுக்கு செல்ல மறுத்தது.

மக்களின் போராட்டங்களினால் கோட்டாபய ராஜபக்ச ஆட்சிப் பொறுப்பில் இருந்து விலகியிருந்த நிலையில், ரணில் விக்ரமசிங்க அந்தப் பதவிக்கு வந்தார். வந்த மறுகணம் முதல் சர்வதேச நாணய நிதியத்திடம் உதவிகளைப் பெறுவதற்கான காய்நகர்த்தல்களை ஆரம்பித்தார்.

மூடிய அறை பேச்சுவார்த்தைகள்!

சர்வதேச நாணய நிதியத்துடனான பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் கடுமையான நிபந்தனைகளுடன் அதிகாரமட்ட இணக்கப்பாட்டிற்கு சர்வதேச நாணய நிதியம் வந்தது. 2.9 பில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்க கொள்கையளவில் முன்வந்துள்ளது. ஆனால் கடுமையான நிபந்தனைகளை முன்வைத்துள்ளது.

மீள செலுத்த வேண்டிய கடன்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதே இதில் முதன்மையானது. இதற்கான முயற்சிகளை ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் ஆரம்பித்தது. பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள். இதில் பல பேச்சுவார்த்தைகள் மூடிய அறைக்குள் நிகழ்த்தப்பட்டன. பாரிஸ் கிளப், கடன் வழங்குனர்கள், நாடுகள் என அனைத்துத் தரப்புக்களுடனும் பேச்சுக்களை ஆரம்பித்தது.

ஜப்பான், இந்தியா உள்ளிட்ட அனைத்துத் தரப்பும் இலங்கைக்கு உதவ இணக்கம் தெரிவித்துள்ளன. ஆனால் சீனா மட்டும் விடாப்பிடியாக இருந்து வருகிறது. பல சுற்றுப் பேச்சுக்கள் சீனாவுடன் நடந்து முடிந்துவிட்டன. ஆனால் சீனா இணங்குவதாக இல்லை. ஒரு நாட்டுடன் மட்டும் கடன் மறுசீரமைப்பை செய்துகொள்வது, ஏனைய நாடுகளுடனான கடன் கொள்கையிலும் இந்த வழிமுறையைப் பின்பற்ற வேண்டிவரும் என்ற காரணத்தை சீனா வலியுறுத்தி வருகிறது. ஆனால் இதுவே சீனா வைக்கும் பொறியின் முதல் நகர்வு என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

ஆபத்தான நேரத்தில் உறவினரை அறிந்துகொள்ளலாம் என்று ஒரு சொல்லாடல் உண்டு. இது நாடுகளுக்கிடையிலான உறவுகளிலும் பொருந்தும். மிக நெருக்கடியான நேரத்தில் உதவ ஜப்பான், இந்தியா முன்வந்துள்ள போதிலும், சீனா மறுத்து வருகிறது. இலங்கைக்கு பொறிவைக்கும் சந்தர்ப்பமாக சீனா இதனைப் பார்ப்பதாகவே அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Related Articles

Latest Articles