நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடுமையான பாதிப்புக்களை எதிர்நோக்கி வீழ்ச்சி கண்டுள்ள கட்டுமானத் தொழிற்துறையை மீள்கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் ஊவா மாகாண சபை உறுப்பினரும் கட்டுமானப் பணியாளர் சங்கத்தின் தேசிய இணைப்பாளருமான வேலாயுதம் ருத்திரதீபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்; பெரும்பாலான இளைஞர்கள் நம் நாட்டிலும், தொழிலுக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் போதும் கட்டுமானத் தொழிலையே தேர்ந்தெடுக்கின்றனர். இவர்கள் உரிய தொழில் பயிற்சியின்றி இருப்பதால், கட்டுமான ஒப்பந்ததார்கள் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் வழங்காமல் விடுகிறார்கள். தேசிய தொழில் தகைமைச் சான்றிதழ் (NVQ) இல்லாது இருப்பதும் இதற்கு ஒரு காரணமாகும்.
கட்டுமானத் தொழிலாளர்கள் முறையான தொழில் பாதுகாப்பு அங்கிகள், உபகரண பயன்பாடு பயிற்சி இன்றி தொழிலில் ஈடுபடுவதனால் திடீர் விபத்துகள் ஏற்படும் போது பாரியளவான உடலியல் பாதிப்புகளுக்கு உட்படுகின்றனர். இத்தொழிலில் ஈடுபடுவோர் சமூக பாதுகாப்பு அற்றவர்களாக காணப்படுகின்றனர். இவர்களுக்கு ஊழியர் நம்பிக்கை நிதி(ETF), ஊழியர் சேமலாப நிதி என்பன வழங்கப்படுவதில்லை. இதன்காரணமாக இவர்களது எதிர்காலம் பாதுகப்பற்றதாகி உள்ளது.
நாட்டை உலுக்கிய கொரோனா காலம் முதல் இன்றைய பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட பணவீக்கம் என்பவற்றால் கட்டுமானப் பொருட்களின் விலை 60 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதனால் பல கட்டுமானப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இப்பணிகளில் ஈடுபட்டு வந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தொழிலிழந்து வாழ்வாதாரம் அற்று நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர். இத்தொழிலில் ஈடுபட்டு வரும் பெண் தொழிலாளர்களும் மகப்பேற்று விடுமுறை போன்ற அடிப்படை தொழில் உரிமைகளை இழந்துள்ளனர்.
எமது சங்கம் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களை இனங்கண்டு அவர்களுக்கு இயன்ற உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது. அரசாங்கம் தமது நிதியொதுக்கீட்டில் இடம்பெறும் கட்டுமானப் பணிகளை முன்னெடுக்கும் போது தொழிற் சட்டங்களுக்கு உட்பட்டு ,உரிய தொழில் பாதுகாப்பை வழங்கி பணிகளை நடைமுறைப் படுத்த வேண்டும். தொழில் அமைச்சு கட்டுமானத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் தொழில் பயிற்சிகளையும், சமூக பாதுகாப்பையும் , காப்புறுதி வசதிகளையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எமது சங்கம் கட்டுமானத் தொழிலாளர்கள், மரவேலையில் ஈடுபடும் தொழிலாளர்கள் போன்றோரை ஒன்றிணைக்கும் வகையில் புதிய தொலைபேசி செயலி ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. இது தொழிலாளர்களுக்கு நன்மை பயப்பதாக அமையும். ஜனாதிபதி ரணில் தலைமையிலான அரசாங்கம் முறைசாரா கல்வி செயற்பாடுகள் மூலம் இத்தொழிலில் ஈடுபடுவோருக்கு முறையான பயிற்சிகளை வழங்கி நாட்டிற்கு அந்நிய செலாவணியை பெற்று கொடுக்கும் வாய்ப்பை அதிகரிப்பதோடு இத்தொழிற்துறையை பாதுகாக்கும் என நம்புவதாக குறிப்பிட்டார்.










