கம்பனிகள் தன்னிச்சையாக செயற்படமுடியாது – சக்திவேல் எச்சரிக்கை

பல்வேறு போராட்டங்களுக்கு பின்னர் தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வினை அரசாங்கம் சம்பள நிர்னைய சபையினூடாக பெற்றுக்கொடுத்துள்ளது. அதற்கு முதலில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் பி.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

இன்று (11) அக்கரபத்தனையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடக வியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கயிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 கடந்த காலங்களில் கம்பனிகள் பல்வேறு போராட்டங்களை செய்தும் கம்பனிகள் தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பினை பெற்றுக்கொடுக்கவில்லை. ஆனால் ஜனாதிபதியும் பிரதமரும் வாக்குறுதிகளை வழங்கியதனை போன்று அதனை செய்துள்ளார்கள்.

கடந்த அரசாங்கம் தோட்டத்தொழிலாளர்கள் தொடர்பாக இவ்வாறான ஒரு அக்கறையினை கொள்ளவில்லை. இந்நிலையில் இந்த அரசாங்கத்திங்கு நாம் கடமை பட்டிருக்கிறோம். அதேநேரம் ஒரு ஜனநாயக நாட்டில் தாங்கள் நினைத்தது போல் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து விலக முடியாது. அதனை தீர்மானிக்க வேண்டியது தொழிற்சங்கங்கள் தான்.

ஆகவே கம்பனிகள் விலகினாலும் மாற்று நடவடிக்கையினை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மேற்கொள்ளும்.

மலையகத்தைச் சார்ந்த பல்வேறு தரப்பினர் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு தொடர்பாக குரல் கொடுத்தும் கூட அது சாத்தியப்படவில்லை. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் சம்பள பேச்சு வார்த்தையின் போது வலியுறுத்தியும் கூட அதனை கம்பனிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. கம்பனிகள் நிராகரித்தாலும் கூட அரசாங்கம் எங்களுக்கு ஒரு வாக்குறுதியினை பெற்றுக்கொடுத்திருந்தது.

தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வினை பெற்றுத்தருவோம் என கூறியிருந்தது. இதற்கமைய அரசாங்கம் வர்த்தமானியில் பிரசுரித்துள்ளது. எதிர்வரும் காலங்களில் சட்ட ரீதியாக வழங்க தமது தரப்பிலே நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆகவே இனி கம்பனிகள் கட்டாயம் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கிதான் ஆகவேண்டும். அரசாங்கம் எமது தலைவர் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வேண்டுகோளினை ஏற்று இதனை நடைமுறைப்படுத்தியுள்ளது. தொழில் அமைச்சர் உட்பட அனைத்து பிரிவினருக்கு தொழிலாளர்கள் சார்பில் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

தோட்ட நிர்வாகத்தைப் பொறுத்தவரையில் அவர்கள் எப்போதும் குறை கூறிக்கொண்டு தான் இருப்பார்கள். அவர்கள் எப்போதும் இதில் அவர்கள் பெறும் ஆதயம் பற்றி பேசுவதில்லை. கூட்டு ஒப்பந்தம் எதிர்காலத்தில் இருக்காது என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள். அது இருக்குமா இல்லையா என்று தீர்மானிக்க வேண்டியவர்கள் நாங்கள்.

ஒரு ஜனநாயக நாட்டில் தனக்கு ஏற்ற வகையில் அதிகாரத்தினை துஸ்பிரயோகம் செய்த மக்களை ஏமாற்றுவதற்கு அல்லது மக்களை துன்புறுத்துவதற்கு அவர்கள் முற்படுவார்கலேயானால் அதனை பார்த்து கொண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சும்மா இருக்காது. நாங்கள் மக்களோடு மக்களாக நின்று அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான சகல ஏற்பாடுகளையும் முன்னெடுப்போம்.

வேலை நாட்கள் குறைப்பது அல்லது கூட்டு ஒப்பந்தத்தில் இல்லாத விடயங்களை அமுல்படுத்துவது என்பது  ம்பனிகள் நினைத்த படி செய்ய முடியாது. அதற்கு என்று சட்டங்கள் உள்ளன. ஆகவே சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எமது அமைப்பு எடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Articles

Latest Articles