கூட்டு ஒப்பந்தமுறைமை இல்லாதுசெய்யப்பட்டால் அதன்மூலம் தொழிலாளர்களுக்கே பாதிப்பு ஏற்படக்கூடும் – என்று கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுள் ஒன்றான பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் எஸ். இராமநாதன் தெரிவித்தார்.
சம்பள உயர்வு விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” அடிப்படை சம்பளத்தை அதிகரிக்காமல் ஏனைய கொடுப்பனவுகளை மட்டும் வழங்குவது ஏற்புடையதாக, தொழிலாளர்களுக்கு சாதகமாக அமையாது. தேயிலைக்கும் நல்ல விலை இருக்கின்றது. 2020 இல் 630 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், சம்பள நிர்ணயசபைக்கு செல்லவேண்டும் எனக்கூறி கூட்டு ஒப்பந்தத்திலிருந்து நாம் வெளியேறவில்லை. ஏனெனில் கூட்டு ஒப்பந்தமுறை இல்லாமல்போனால் தொழிலாளர்களுக்கே அது பாதிப்பாக அமையும்.
தற்போதைய நிலையில் ஆயிரம் ரூபா போதாது. அதற்கு மேல்தான் சம்பள உயர்வு கிடைக்கவேண்டும்.
ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் என்ற உறுதிமொழியை அரசாங்கம் பல தடவைகள் வழங்கியுள்ளன. எனவே, சம்பள உயர்வு விவகாரத்தில் அரசாங்கத்தின் அழுத்தம் இருக்கவேண்டும். எனினும், அரசு அதைனை செய்யவில்லை. தோட்டக்கம்பனிகள் பக்கம் நிற்பதால்கூட அழுத்தங்களை பிரயோகிக்காமல் இருக்கலாம்.” – என்றார்.
