மன்னாரில் முன்னெடுக்கப்படும் காற்றாலைத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று மன்னாரில் பொது முடக்கமும் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியும் நடைபெற்றன.
மன்னாரில் காற்றாலை செயற்றிட்டத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் இருந்த மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலுக்குக் கடும் எதிர்ப்பை வெளியிடும் வகையிலும் மன்னாரில் பொது முடக்கமும் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியும் இன்று இடம்பெற்றன.
இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் நகர சபை பொது மைதானத்தில் ஆரம்பமாகிய பேரணி, மன்னார் பிரதான வீதியூடக பஸார் பகுதிக்குச் சென்று மாவட்ட செயலகத்துக்கு முன்பாக பல்லாயிரக்கணக்கான மக்களுடன் பல கோஷங்களை எழுப்பியவாறு மாபெரும் போராட்டம் இடம்பெற்றது.
போராட்டத்தின் இறுதியில் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஜனாதிபதிக்கு கையளிக்கும் வகையில் மன்னார் மாவட்ட அரச அதிபரிடம் கையளித்தோம் என்று மன்னார் பிரஜைகள் குழு தெரிவித்துள்ளது.
இன்றைய போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் மதகுருமார்களும், அரசியல்வாதிகளும் கலந்துகொண்டனர்.










