கிழக்கு முனையம் குறித்து பிரதமர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அந்நியர்களுக்கு வழங்கமாட்டோம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.தெரிவித்தார்.

கிழக்கு முனையத்தை பாதுகாக்கும் தொழிற்சங்கத்தினருக்கும்,  பிரதமருக்குமிடையிலான சந்திப்பு இன்று அலரிமாளிகையில் நடைபெற்றது.

உள்ளூர் வளங்களை விற்பனை செய்வதை தவிர்க்கும் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையின் கீழ் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை எந்தவொரு நாட்டிற்கும் விற்பனை செய்யவோ அல்லது கட்டுபாடு வழங்கப்படவோ மாட்டாது என  பிரதமர்  இதன்போது குறிப்பிட்டார். அது 100 வீதம் துறைமுக அதிகாரசபையின் கீழ் செயற்படும் நிறுவனமாக தொடர்ந்தும் செயற்படும் என்றும் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட துறைக்கு பொறுப்பான அமைச்சர் ரோஹித் அபேகுணவர்தன  இது குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை   ஜனாதிபதி மற்றும்  பிரதமரிடம் கையளித்ததை தொடர்ந்து அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை சர்வதேச நிறுவனத்திற்கு முன்வைக்கும்போது குறித்த விடயங்களுக்கு அந்நிறுவனம் உடன்படாமையினால் கிழக்கு முனையத்தை 100 வீதம் துறைமுக அதிகாரசபையின் கீழ் செயற்படும் நிறுவனமாக்குவது குறித்த அமைச்சரவை பத்திரம் பிற்பகலில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தீர்மானத்திற்கு கிழக்கு முனையத்தை பாதுகாக்கும் தொழிற்சங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது.அதற்கமைய சட்டப்படி வேலை செய்யும் செயற்பாட்டை நாளை முதல் கைவிடுவதற்கும் தொழிற்சங்கத்தினர் ஒப்புக்கொண்டுள்ளனர்.

துறைமுகத்தின் கிழக்கு முனையம் அந்நியர்களுக்கு வழங்கப்படமாட்டாது என்பதை உறுதியளித்து எழுத்து மூலமான ஆவணமொன்றை வழங்குமாறு குறித்த கலந்துரையாடலின்போது தொழிற்சங்க தலைவர்கள் கோரியுள்ளனர்.

ஆனால் தனது 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் தொழிற்சங்கங்களினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பலவற்றை தாம் தீர்த்துள்ள போதிலும், அது குறித்து எழுத்து மூலமான ஆவணமொன்றை இதுவரை வழங்கியதில்லை என்றும், தாம் வாக்குறுதியளித்தால் அது அவ்வாறே நிறைவேற்றப்படும் என  பிரதமர் குறிப்பிட்டார்.

பிரதமர் என்ற வகையில் நான் முன்னெடுக்கும் கூட்டங்களில் எடுக்கப்படும் தீர்மானங்களை அவ்வாறே செயற்படுத்துவதற்கு அரச அதிகாரிகள் கடமைப்பட்டுள்ளனர். நான் மேற்கொள்ளும் தீர்மானங்கள் கலந்துரையாடல்களுடன் மட்டுப்படாது அவை செயற்படுத்தப்படும் எனவும்   பிரதமர் தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலில் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதானி யோஷித ராஜபக்ஷ, இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்நாயக்க, பிரதமரின் தொழிற்சங்க பணிப்பாளர் ஜெனரல் சுமித் விஜேசிங்க மற்றும் 23 துறைமுக தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தி தொழிற்சங்க தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Related Articles

Latest Articles