ஆளுங்கட்சி நாடாளுமன்றக்குழுக் கூட்டம் ஜனாதிபதி விக்கிரமசிங்க தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது சமகால அரசியல் நிலைவரங்களுக்கு அப்பால் ‘குரங்கு விவகாரம்’ பற்றியும் பேசப்பட்டுள்ளதாம்.
கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே ‘குரங்கு விவகாரம்’ குறித்து கேள்வி எழுப்பி இதற்கு பிள்ளையார் சுழி போட்டாராம்.
“ இந்த குரங்கு தொல்லை தாங்க முடியவில்லை, எனது தொகுதியிலும் நிலைமை மோசம். ஆக அவற்றை சீனாவுக்கு அனுப்பும் முடிவை நிறுத்தவே கூடாது. இது விடயம் தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்னவென்று”வினா எழுப்பினாராம் அந்த எம்.பி.
‘குரங்குகளுக்கு இன்னும் விசா’ கிடைக்கவில்லை என இதற்கு சிரித்தப்படியே பதிலளித்தாராம் ஜனாதிபதி.
இதன்போது குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த வீரசங்க, “ குரங்குகளை சீனாவுக்கு அனுப்ப கூடாது. குரங்கு மூளையை அவர்கள் உண்கின்றனராம். நானும் எனது வீட்டில் 20 வருடங்களாக குரங்கு வளர்த்தவன். அதனால் அவ்வளவு பாதிப்பில்லை.” என்றார்.
அவரின் இந்த கருத்தையடுத்து கூட்டத்தில் சிரிப்பொலி மேலோங்கியது. “ அப்படியானால் குரங்குகளை கொண்டுவந்து உங்கள் வீட்டில் விடலாம், அதுமட்டுமல்ல உங்களுக்கு குரங்குதுறை அமைச்சையும் வழங்கலாம் போலும்” என ஆளுங்கட்சி உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
“ இது சிரிப்பதற்குரிய விடயம் அல்ல, குரங்கு பிரச்சினை பெரும் பிரச்சினைதான். இரண்டு சீன நிறுவனங்கள் என்னுடனும் பேச்சு நடத்தின. அவை இறைச்சிக்காக அல்ல, மிருகக்காட்சிசாலைக்கே கொண்டுசெல்லப்படுகின்றன. இதற்கு அனுமதி வழங்க வேண்டும்.” என ஒரு போடு போட்டாராம் மஹிந்தானந்த அளுத்கமகே. அவருக்கு விவசாயத்துறை அமைச்சரும் பக்கபலமாக இருந்தாராம்.
