கூட்டு ஒப்பந்தமானது தோட்டத் தொழிலாளர்கள் மீது திணிக்கப்பட்ட அடிமை சாசனம் என விமர்சித்தவர்கள், தற்போது அது தோட்டத்தொழிலாளர்களை காக்கும் கவசம் எனவும் அதன் சரத்துக்களை நீக்கக் கூடாது எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” கூட்டு ஒப்பந்தம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தையும் தாண்டி அவர்களின் தொழில் பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு, மற்றும் அவர்களின் நலன்புரி விடயங்கள் போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாகும். இதை நாம் தொடர்ச்சியாக தெளிவுபடுத்தியும், வலியுறுத்தியும் வந்திருக்கிறோம்.
எதிரணி தொழிற்சங்கங்கள் இதன் உண்மைத்தன்மையை அறிந்திருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட அரசியல் தொழிற்சங்க நிகழ்ச்சி நிழலுக்காக கூட்டு ஒப்பந்தத்தை அடிமை சாசனம் என விமர்சனம் செய்து வந்தார்கள். ஆனால் இன்று அதன் சரத்துக்களை பாதுகாக்க வேண்டும் என்று பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கின்றனர்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் கடந்த காலங்களில் காணப்பட்ட பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காகவேகூட்டு ஒப்பந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 1000 ரூபா சம்பள உயர்வினை கூட்டு ஒப்பந்த முறையின் மூலம் பெற்றுக் கொடுக்க பெருந்தோட்ட கம்பனிகள் முன்வராவிட்டால் சம்பள நிர்ணய சபை முறைக்கு செல்லவும் தயங்கமாட்டோம் என்று கூறிய பிறகு சில மலையக அரசியல்வாதிகளின் சுயரூபம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
தற்போதைய நிலையில் ஆளும் பொதுஜன பெரமுன அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளத்தை வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. இந்தநிலையில் சம்பள நிர்ணய சபைக்கு சென்றாலும் அரசாங்கத்தின் ஆதரவோடு ஆயிரம் ரூபா சம்பளக் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்பம் இருக்கிறது.
இந்த சந்தர்ப்பத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சாதுரியமாக பயன்படுத்திக் கொள்ளும். அதே நேரத்தில் கூட்டு ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை ஒரு போதும் உதாசீனம் செய்துவிட முடியாது என்பதில் மிகுந்த கவனத்தோடு செயல்பட உள்ளோம்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸை பொறுத்தவரையில் அரசியல் தொழிற்சங்க லாபங்களை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு பெருந்தோட்ட சமூகத்தின் வாழ்வாதாரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டு செயற்படுகின்ற அமைப்பாகும். இதனால்தான்கடந்த காலங்களில் கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்த விமர்சனங்கள், அவமானங்கள், பொய் பிரச்சாரங்கள்என்பனவற்றை மிகுந்த வேதனையோடு தாங்கிக்கொண்டு சரியானதும் நிலையானதுமான பாதையில் பயணம் செய்து வந்திருக்கிறோம்.
இந்த நிலையிலாவது கூட்டு ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து எதிரணி தொழிற்சங்கங்களின் கருத்து வெளிவந்திருப்பது சற்று ஆறுதலை தருகிறது. எதிர்வரும் காலங்களில் இவர்கள் அரசியல் லாபங்களுக்காக தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சினை பிழையான திசைக்கி திசைதிருப்ப கூடாது என்பதையும் வலியுறுத்த விரும்புகிறோம். ” எனவும் கணபதி கணகராஜ் கூறினார்.










