கூரிய வாள்கள், ஐஸ் போதைப்பொருள்களுடன் வீட்டில் தங்கியிருந்த 19 பேர் மூதூர் பொலிஸாரால் கைது

சந்தேகத்துக்கிடமான முறையில் வீடொன்றில் தங்கியிருந்த 19 பேர் மூதூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து கூரிய வாள்கள், ஐஸ் போதைப்பொருள்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகத்துக்கிடமான முறையில் மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள தோப்பூர் பிரதேசத்தில் ஒரு குழுவினர் ஒன்று கூடுகின்றனர் என்று மூதூர் பொலிஸாருக்கு நேற்று சனிக்கிழமை மாலை தகவல் கிடைத்ததை அடுத்து மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கமைவாக பொலிஸ் குழுவினர் அந்த வீட்டை முற்றுகையிட்டனர்.

இதன்போது 19 பேர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடம் இருந்து 4 கூரிய வாள்கள், ஐஸ் போதைப்பொருள்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஈச்சிலம்பற்று, தோப்பூர், மூதூர், பச்சநூர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர்கள் மூதூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

விசாரணைகளின் பின்னர் மேற்படி சந்தேகநபர்களை மூதூர் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Latest Articles