கைக்குண்டுடன் இளைஞன் கைது!

மஹியங்கனை பகுதியில்நேற்று மாலை உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 26 வயதுடைய மஹியங்கனை தொடங்வத்தை 20 வது வீட்டுத்திட்டம் பகுதியை சேர்ந்தவர் என மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

மஹியங்கனை மஹாவலி கங்கை பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் குறித்த பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் இளைஞர் ஒருவர் நடமாடியதை அவதானித்து உள்ளனர்.

பின்னர் சந்தேக நபரை அணுகி குறித்த நபரை சோதனைக்கு உட்படுத்திய போது அவரிடம் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த கைக்குண்டை எதற்காக அவர் கொண்டு சென்றார் எங்கிருந்து பெற்றார்? குற்றச்செயல்கள் எதற்கும் பயன்படுத்த கொண்டு சென்றாரா? என பல கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை இன்றைய தினம் மஹியங்கனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் மஹியங்கனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

ராமு தனராஜா

Related Articles

Latest Articles