தம்புத்தேகமவில் வங்கிக் கொள்ளையர்கள் இருவரைக் கைது செய்த பொலிஸ் சார்ஜன் பி.ஏ.புத்திக குமார, உப பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார் என்று பொலிஸ் தலைமையகம், இன்று (03) அறிவித்தது.
தம்புத்தேகமவிலுள்ள தனியார் வங்கியொன்றில் 2 கோடியே 23 இலட்சம் ரூபாய் நிதியை வைப்பிலிடுவதற்காக பொருளாதார வர்த்தக மத்திய நிலையத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கடந்த 26ஆம் திகதி வங்கிக்குச் சென்று கொண்டிருந்தார்.
அவரிடம் ஆயுதத்தைக் காட்டி குறித்த பணத்தைக் கொள்ளையிட்டு தப்பிக்க முயன்றபோது, அவர்களை தடுத்து, கடும் போராட்டத்தின் பின்னர் இருவரையும் குறித்த சார்ஜன் கைது செய்திருந்தார்.
கொள்ளையர்களுடன் போராடிய சந்தர்ப்பத்தில், சார்ஜனை நோக்கி சுட்டபோது துப்பாக்கி வெடிக்கவில்லை என்பதுடன், அவர் மீது கொள்ளையர்கள் நடத்திய மிளகாய்ப் பொடி தாக்குதலிலும் தப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், அவர்களிடமிருந்த துப்பாக்கி மற்றும் கத்தி ஆகியவற்றையும் அவர் மீட்டிருந்த நிலையிலேயே அவருக்கு பதவியுயர்வு வழங்க்கபட்டுள்ளது.
இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் குறித்த வங்கிக் கிளையின் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றியிருந்தார் என்று விசாரணைகளில் தெரியவந்தது.
