கொழும்பு கோட்டையிலிருந்து கண்டிக்கு விசேட சொகுசு ரயில் சேவையொன்றை நாளை முதலாம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அதன்படி காலை 6.30 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் சொகுசு ரயில்முற்பகல் 9 .18 மணிக்கு கண்டியை சென்றடைவதுடன் மீண்டும் கண்டியிலிருந்து அந்த ரயில் பிற்பகல் 4.50 மணிக்கு கொழும்பு கோட்டையை நோக்கி புறப்படும். அந்த ரயில் இரவு 7.40 மணிக்கு கொழும்பு கோட்டையை வந்தடையமென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த ரயில் சேவை நடைபெறுமென தெரிவித்துள்ள அவர், வார இறுதி நாட்களில் அதிகரிக்கும் பயணிகளின் நலனைக் கருத்திற் கொண்டு இந்த ரயில் சேவை ஆரம்பிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த ரயிலில் முதலாம் வகுப்பு கட்டணம் 2,000 ரூபாவாகவும் இரண்டாம் வகுப்பு கட்டணம் 1,500 ரூபாவாகவும் அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கண்டி தலதா மாளிகைக்கு யாத்திரை செல்வோர் மற்றும் பேராதனை பூங்காவை பார்வையிட செல்வோர் உட்பட கண்டி நகரின் எழிலை கண்டுகளிப்பதற்காக செல்லும் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளின் வசதி கருதியே இந்த ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், சொகுசு ரயில் சேவையாக பாதுகாப்புடன் இந்த சேவை அமைவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதே வேளை,அனுராதபுரத்துக்கு யாத்திரை செல்லும் மக்களின் நலன் கருதி கொழும்பு கோட்டையிலிருந்து அனுராதபுரத்துக்கு விசேட ரயில் சேவையை விரைவில் ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.










