பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அநீதியை, ஊடகங்களுக்கு வெளியிட்டதால், தோட்டத் தொழிலாளி ஒருவரை தோட்ட நிர்வாகம் பணி நீக்கம் செய்த சம்பவமொன்று பசறைப் பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.
பசறைப்பகுதியின் கோணக்கலை பெருந்தோட்ட மேற்பிரிவைச் சேர்ந்த எம். கெப்பிரியல் என்ற தொழிலாளியையே தோட் நிர்வாகம் இவ்வாறு பணி நீக்கியுள்ளது.
கோணக்கலை பெருந்தோட்ட மேற்பிரிவைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு ஒரு கிலோகிராம் கோதுமை மா என்பது ரூபாய் (80 ) என்றடடிப்படையில் 15 கிலோகிராம் கோதுமை மாவிற்கு ஆயிரத்து இருநூறு ரூபாய் தொழிலாளர்களின் சம்பளத்தில் கழிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் சம்பளப்பட்டியலிலும் இக் கழிவு குறிப்பிடப்பட்டிருக்கின்றது. ஆனாலும் குறிப்பிட்டிருக்கும் கோதுமை மா தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை.
பதுளை மாவட்டத்தில் மேலும் சில தோட்டங்களில் இதே நிலமை இருந்து வருவதாகவும் தொழிலாளர்கள் புகார் செய்கின்றனர்கள்.
இது குறித்து, தொழிலாளர்கள் தோட்ட நிருவாகத்திடம் வினாவிய போது, கோதுமை மா கிடைத்ததும் தந்துவிடுவோம் என பதில் கிடைத்தது. ஆனால் கோதுமை மாவோ அல்லது அதற்குரிய பணமும் இதுவரை கிடைக்கவில்லை. இவ் அநீதியை எதிர்த்து தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுப்பட்டிருந்தனர்.
அத்தொழிலாளர்களில் எம். கெப்பிரியல் என்பவரே தமக்கு ஏற்பட்ட அநீதியை ஊடகங்களுக்கு வெளியிட்டார். இதனை ஜீரணிக்க முடியாத தோட்ட நிருவாகம் குறிப்பிட்ட தொழிலாளியை இன்று முதல் 2022-02-15 வேலைநீக்கம் செய்தது.
மீண்டும் வேலை தருவதானால், ஊடகவியலாளர்களை மீளவும் தோட்டத்திற்கு வரழைத்து, அவர்கள் முன்னிலையில் தோட்ட நிருவாகத்திடம் மன்னிப்பு கோரினால் மட்டுமே, மீளவும் தொழில் வழங்கப்படுமென தோட்டநிருவாகம் கூறியதாக எம். கெப்பிரியல் என்ற தொழிலாளி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் தெரிவிக்கையில் , உண்மை நிலையைத்தான் எமது ஊடகங்களுக்கு வெளிப்படுத்தினேன்.தோட்ட நிருவாகம் கூறுவதுபோன்று எவரிடமும் மன்னிப்பு கோரபோவதில்லை.” – என்றார்.
எம். செல்வராஜா, பதுளை
