ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஒன்று கூடியிருந்த கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு கலைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடுமையான கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
மனித உரிமைகள் ஆணைக்குழு
காலி முகத்திடல் வளாகத்தில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டித்துள்ளது . இது தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்கும் மாறும் வலியுறுத்தியுள்ளது
ஹனா சிங்கர் ஹம்டி
போராட்டக்காரர்களை கலைக்க படையினரை பயன்படுத்தியமை கவலையளிக்கிறது என்று ஐ.நா. சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கு ஆர்ப்பாட்டங்களைக் கண்காணிக்க உரிமை உண்டு. எனவே அவர்களின் செயல்பாடுகளுக்கு தடை ஏற்படுத்தப்படக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நியூசிலாந்து உயர்ஸ்தானிகர்
ஒரே இரவில் காலி முகத்திடலில் இடம்பெற்ற நிகழ்வுகள் கவலையளிப்பதாக நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் எப்பல்டன் தெரிவித்துள்ளார்.
பேச்சு சுதந்திரம், ஊடக சுதந்திரம் மற்றும் அமைதியான போராட்டத்திற்கான உரிமை ஆகியவை அனைத்து சுதந்திரமான சமூகங்களின் அடித்தளமாகும். எனவே அவை பாதுகாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மைத்திரிபால
காலி முகத்திடல் போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடி இணக்கப்பாட்டின் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண்பது சிறந்தது. அதனை விடுத்து சர்வதேசத்தின் ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படும் இந்த நேரத்தில், அடக்குமுறை செயற்பாடுகள் நாட்டின் எதிர்காலத்தை பாதிக்கும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணிகள் சங்கம்
காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பிரயோகிக்கப்பட்ட வன்முறை நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தனது முகநூல் கணக்கில் பதிவொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்தார்.
