சகல சபைகளையும் தமிழரசு கட்சி கைப்பற்றும்!

இலங்கைத் தமிழரசுக் கட்சி போட்டியிடுகின்ற சகல உள்ளூராட்சி சபைகளிலும் ஆட்சியைக் கைப்பற்றும் என்று கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மீண்டும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நியமனங்கள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவு – கள்ளப்பாடு பகுதியில் இடம்பெற்றது.

இதன்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள எம்.ஏ.சுமந்திரனுக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட செயலாளருமான துரைராசா ரவிகரன் பொன்னாடை போர்த்தி மதிப்பளித்தார்.

இந்தக் கலந்துரையாடலின் பின்னர் கருத்துத் தெரிவிக்கையில் சுமந்திரன் மேலும் கூறியவை வருமாறு:-

“முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி போட்டியிடுகின்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல் நியமனம் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.

சில இடங்களில் வேட்பாளர் நியமனங்களில் இருந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, பெரும்பாலும் வேட்பாளர் நியமனங்கள் தொடர்பான முடிவுகள் எய்தப்பட்டிருக்கின்றன.

எனவே, மிக விரைவாக அடுத்த வாரம் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வாம்.

அந்தவகையில் போட்டியிடுகின்ற அனைத்து உள்ளூராட்சி சபைகளையும் இலங்கைத் தமிழரசுக் கட்சி கைப்பற்றும் என்ற நம்பிக்கையிருக்கின்றது.” – என்றார்.

Related Articles

Latest Articles