தமது கட்சியான ஐக்கிய குடியரசு முன்னணியுடன் ஐக்கிய மக்கள் சக்தி ஏற்படுத்திக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறியதால் இம்முறை பொதுத் தேர்தலில் தமது கட்சியிலிருந்து எவரும் போட்டியிட மாட்டார்கள் என கட்சியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று(10) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை அறிவித்தார்.
பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஐக்கிய குடியரசு முன்னணி கட்சி 2023ஆம் ஆண்டு மே 22ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
அதன்பின்னர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒப்பந்தமிட்டு சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவாக செயற்பட்டது.
இவ்வாறான சூழலில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமது கட்சியிலிருந்து எவரும் போட்டியிட மாட்டார்கள் எனவும் ஐக்கிய மக்கள் சக்தி தமது கட்சியுடனான ஒப்பந்தத்தை மீறியதால் தமது ஆதரவை விலக்கிக் கொள்வதாகவும் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.










