‘சந்திரிக்கா, சஜித்தையும் இணைத்துக்கொண்டு ஜெனிவா சவாலுக்கு முகங்கொடுக்கவும்’

“இறுதிக்கட்டப்போரின்போது 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் என முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை ஏற்கமுடியாது. அத்துடன், முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா, மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரையும் இணைத்துக்கொண்டு ஜெனிவா பிரச்சினையை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் முன்வரவேண்டும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“உள்நாட்டுப்போர் முடிவடைந்த பின்னர் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும், ஐ.நா. பொதுச்செயலாளராக செயற்பட்ட பான்கீ மூனும் இணைந்து கூட்டறிக்கையொன்றை வெளியிட்டனர்.  அதன் விளைவாகவே தாருஸ்மன் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை நாம் ஏற்கவில்லை. 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் எனக் கூறப்படும் விடயத்தை நிராகரிக்கின்றோம். போரின்போது சிற்சில சம்பவங்கள் இடம்பெறக்கூடும்.

அதனை அடிப்படையாகக்கொண்டு படையினர்மீது மனித உரிமைமீறல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதனை ஏற்கமுடியாது. அதேபோல உள்நாட்டு விவகாரங்களில் சர்வதேசம் தலையிடுவதையும் நாம் அனுமதிக்கமாட்டோம். எந்நேரத்திலும் நாட்டுக்காக முன்னிலையாவதற்கு தயாராகவே இருக்கின்றோம்.

அதேவேளை, போர்காலத்தில் ஜனாதிபதியாக பதவி வகித்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ச ஆகியோர் இருக்கின்றனர். மைத்திரிபால சிறிசேனவும் இருக்கின்றார். இவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவையும் இணைத்துக்கொண்டு ஜெனிவா சவாலை எதிர்கொள்வதற்கான திட்டத்தை அரசு வகுக்கவேண்டும். அதனைவிடுத்து ஜெனிவா விவகாரத்தை அரசியல் மயப்படுத்துவதுதான் சிக்கல்களை உருவாக்குகின்றது.” – என்றார்.

Related Articles

Latest Articles