“சபாநாயகர்மீதான நம்பிக்கை குறைவடைந்துவருகின்றது. எனவே, அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவது தொடர்பில் கட்சி தலைவர்கள் விரைவில் முடிவெடுப்பார்கள்.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணை நிறைவடையும்வரை பதவி விலகுமாறு பிரதி பாதுகாப்பு அமைச்சரிடம் வலியுறுத்தினோம். குறித்த சம்பவம் நடக்கும்போது அவரே கிழக்கு மாகாண கட்டளை தளபதியாக இருந்தார். எனினும், அவர் பதவி விலகவில்லை. அரசும் அவரை பதவிநீக்கவில்லை. அதனால்தான் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டது.”- எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த பிரேரணையை சபாநாயகர் நிராகரித்துள்ளார். சட்டமா அதிபரால் வழங்கப்பட்ட சட்ட ஆலோசனையை சபையில் முன்வைக்குமாறு நாம் சபாநாயகரிடம் வலியுறுத்தினோம். குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஏற்க முடியும் என சட்டமா அதிபர் கூறினார் என எமக்கு தகவல் கிடைத்தது. அதனை உறுதிப்படுத்திக்கொள்ளவே ஆவணத்தை கோரினோம். எனினும், அது வழங்கப்படவில்லை.
பிரதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர முடியும். எனினும், சபாநாயகர் அரசியல் முடிவொன்றை எடுத்து அதனை நிராகரித்துள்ளார். இது அரசாங்கத்தை பாதுகாக்கும் செயலாகும். இது விடயத்தில் சபாநாயகர் ஒரு தலைபட்சமாக செயற்பட்டுள்ளார்.
அரசாங்கத்துக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் உள்ளது. அப்படி இருந்தும் எதற்காக விவாதத்தக்கு அஞ்ச வேண்டும். இப்பிரேரணையை விவாதத்துக்கு எடுத்தால் ஆளுங்கட்சியில் உள்ள சிலருக்கு கடந்த அரசுகளுடன் இருந்த தொடர்பு அம்பலமாகும். இதனால்தான் ஆளுங்கட்சி அஞ்சுகின்றது.” – எனவும் முஜிபூர் ரஹ்மான் குறிப்பிட்டார்.