இலங்கையின் யால சரணாலயத்திற்குள் விதிகளை மீறியதாக தெரிவிக்கப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய 9 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் திஸ்ஸமஹராம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், இன்று அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையின் யால சரணாலயத்திற்குள் கடந்த சனிக்கிழமை 33 வாகனங்களில் சுமார் 100 பேர் பிரவேசித்துள்ளனர்.
இவர்கள் யால சரணாலயத்தில் வாகனத்தில் பயணித்த விதம் தொடர்பான பல காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியானதையடுத்து சிறிலங்கா வனஜீவராசிகள் திணைக்களத்தினால் இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் கண்காணிப்பு கருவி காணொளிகள் மற்றும் காணொளி காட்சிகள் மூலம் வனவிலங்கு சட்டமீறல்கள் இடம்பெற்றுள்ளமை குறித்து உன்னிப்பாக ஆராய்ந்து வருவதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு பேர் வனஜீவராசிகள் அதிகாரிகளிடம் இன்று சரணடைந்தனர். இதனையடுத்து, அவர்கள் திஸ்ஸமஹராம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், ஒவ்வெருவரும் தலா 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, யால சரணாலயத்தில் மிருகங்களை துன்புறுத்தும் வகையில் வாகனத்தை செலுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக மூவரடங்கிய குழுவொன்றை நியமிக்க ஸ்ரீலங்காவின் வன வளங்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சந்திரா ஹேரத் தீர்மானித்துள்ளார்.
யால சரணாலயத்தில் கடமையாற்றிய உத்தியோகத்தர்கள் கடமை தவறியமை மற்றும் சம்பவம் தொடர்பில் உயர் அதிகாரிகளுக்கு அறிவிக்காமை தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்வதற்கு உரிய குழுவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் கலந்துரையாடி அமைச்சின் மேலதிக செயலாளர் தலைமையில் மூவரடங்கிய குழுவை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் வன வளங்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.










