“எரிபொருட்களின் விலையை அதிகரிப்பதற்கான முடிவை வாழ்க்கைச்செலவு தொடர்பான அமைச்சரவை உப குழுவே எடுத்தது. ஜனாதிபதி மற்றும் பிரதமரை பாதுகாக்கவே, நெருக்கடியான நிலையிலும் விலை அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பை நான் சுயமாக முன்வந்து விடுத்தேன். இந்நிலையில் ஜனாதிபதி, பிரதமரை எதிர்க்கும் அளவுக்கு சாகர காரியவசத்துக்கு அதிகாரம் வழங்கியது யார்?
இவ்வாறு வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில கேள்வி எழுப்பியுள்ளார்.
” கொரோனா நெருக்கடியால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும் விதத்தில் எரிபொருள் விலை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளமை ஏற்கமுடியாது. எனவே, இந்நிலைமைக்கு பொறுப்பேற்று துறைசார் அமைச்சர் பதவி விலக வேண்டும். ” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் நேற்று முன்தினம் மாலை விசேட அறிக்கையொன்றை விடுத்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வலுசக்தி அமைச்சில் அமைச்சர் உதய கம்மன்பில ஊடகவியலாளர் மாநாடொன்றை ஏற்பாடு செய்திருந்தார். இதன்போது அவர் கூறியவை வருமாறு,
“வாழ்க்கைச்செலவு தொடர்பான அமைச்சரவை உபக்குழுவில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களான பந்துல குணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே, டளஸ் அழகப்பெரும, நாமல் ராஜபக்ச மற்றும் இராஜாங்க அமைச்சர்களான அஜித் நிவாட் கப்ரால், லசந்த அழகிவன்ன ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். இக்குழு கூடியே விரிவான கலந்துரையாடலின் பின்னர் எரிபொருட்களின் விலையை அதிகரிப்பதற்கான அனுமதியை வழங்கியது. எனவே, இது அரசால் எடுக்கப்பட்ட முடிவாகும். அறிவிப்பை மாத்திரமே நான் விடுத்தேன்.
எரிபொருட்களின் விலை உயர்வு சம்பந்தமான அறிவிப்புகளை வழமையாக நிதி அமைச்சே வெளியிடும். எனினும், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை நெருக்கடி நிலைக்கு தள்ளக்கூடாது என்பதால் அரச தலைவர்களை பாதுகாக்கும் நோக்கில் சுயமாக முன்வந்து விலை அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பை நான் விடுத்தேன். எவரும் எனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. என்னால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் நிதி அமைச்சர் என்ற வகையில் பிரதமரின் பிரதிநிதியாக இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் பங்கேற்றிருந்தார்.
எனவே, சாகர காரிய வசம் என்பவர் விமர்சனங்களை தொடுப்பது எனக்கு எதிராக அல்ல. மாறாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரையே அவர் விமர்சிக்க விளைந்துள்ளார். அரச தலைவர்களை எடுத்த முடிவை விமர்சித்து சாகர காரியவசம் பெரும் தவறை இழைத்துள்ளார். எனவே, பதவி விலகவேண்டியது நானா, சாகர காரியவசமா?
இவ்வாறானதொரு அறிவிப்பை விடுப்பதற்கு கட்சி மட்டத்தில் கலந்துரையாடப்படவில்லை என மொட்டு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்தனர். பிரதமர் மற்றும் கட்சியின் தவிசாளருக்குகூட இது தொடர்பில் எதுவும் தெரியாது. எனவே, இவ்வாறானதொரு அறிவிப்பை விடுப்பதற்கு சாகரவுக்கு அதிகாரம் வழங்கியது யார்?
எரிபொருள் விலை உயர்வுக்கான நெருக்கடி நிலைக்கு நான்தான் காரணமென சாகர கருதினால், என்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கின்றேன். நான்தான் பொறுப்பு என அவர் அறிக்கை விடுத்துள்ளார். எனவே, விவாதத்துக்கு வந்தால் யார் பொறுப்பு என்பதை விவாதிக்கலாம். ” – என்றார்.










