” போலிக் குற்றச்சாட்டுகளை சுமத்தி, சிறையில் அடைப்பதன்மூலம் எமது பயணத்தை தடுக்க முடியாது. மக்களுக்கான எமது வேலைத்திட்டம் தொடரும்.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எம்.பி. சூளுரைத்துள்ளார்.
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் முறைப்பாடுகளை முன்வைப்பதற்கான அலுவலகத்தை மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று திறந்துவைத்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட நாமல் கூறியவை வருமாறு,
” தேர்தல் காலங்களில் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை தற்போது அரசாங்கம் நிறைவேற்றவில்லை. அதற்கு மாறாகவே செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. அரச சேவை பலப்படுத்தப்படும் என்றார்கள். ஆனால் தற்போது பலவீனப்படுத்தப்பட்டுவருகின்றது.
அத்துடன், அரசியல் பழிவாங்கல்களும் ஆரம்பமாகியுள்ளன. எனவே, அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாக்கப்படும் தொழிற்சங்க தலைவர்கள் உட்பட அனைவருக்கும் சட்ட உதவிகள் வழங்கப்படும்.
போலிக்குற்றச்சாட்டுகளை சுமத்தி எம்மை சிறையில் அடைத்து எமது பயணத்தை தடுக்க முடியாது.” – என்றார்.










