செம்மணியில் இன்று 2 என்புத் தொகுதிகள் அடையாளம்!

 

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றைய அகழ்வின் போது இரண்டு மனித என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த ஐந்து மனித என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 20 ஆம் நாள் அகழ்வு இன்று இடம்பெற்றது.

இன்றைய அகழ்வின் போது இரண்டு மனித என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த ஐந்து மனித என்புத் தொகுதிகள் இன்று முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 90 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 81 மனித என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் சித்துப்பாத்தி இந்து மயான எல்லையைச் சூழ ஸ்கான் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. அதன் முதல் கட்டமாக இன்று துப்பரவுப் பணிகள் இடம்பெற்றன. எதிர்வரும் நாட்களில் ஸ்கான் பரிசோதனை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

யாழ். நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில், துறைசார் நிபுணர் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் தலைமையில் இன்று அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன், சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினர், யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மற்றும் கலைப்பீட தொல்லியற்துறை மாணவர்கள் இன்றைய அகழ்வுப் பணிகளின் போது முன்னிலையாகி இருந்தனர்.

Related Articles

Latest Articles