செம்மணியில் இன்று
5 என்புத் தொகுதிகள்
முழுமையாக அகழ்வு
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது ஐந்து என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 22ஆம் நாள் அகழ்வு இன்று இடம்பெற்றது.
இன்றைய அகழ்வின் போது ஐந்து மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 95 மனித என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அரை நாள் மாத்திரமே அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன. புதாக என்புத் தொகுதிகள் எவையும் அடையாளப்படுத்தப்படவில்லை.
யாழ். நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில் துறைசார் நிபுணரும் பேராசிரியருமான ராஜ் சோமதேவாவின் தலைமையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் சட்டத்தரணி பூரணி மரியநாயகம், சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினர், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட மற்றும் கலைப்பீட தொல்லியற்துறை மாணவர்கள் ஆகியோர் அகழ்வுப் பணிகளின் போது முன்னிலையாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.