ஜனாதிபதி கோட்டாவை சந்திக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் திட்டம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து பேச்சு நடத்துவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதமும் அனுப்படவுள்ளது.

கொரோனா நெருக்கடி நிலைமையை சமாளிப்பது பற்றியும், அதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பது சம்பந்தமாக ஆராய்வதற்கு சர்வக்கட்சி கூட்டத்தை கூட்டி, சர்வக்கட்சி பொறிமுறை ஊடாக தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்திருந்தது.

எனினும், ஜனாதிபதி தரப்பில் இருந்து அதற்கு உரிய பதில் வழங்கப்படவில்லை. இந்நிலையிலேயே சந்திப்புக்கான நேரம் கோரி கடிதம் அனுப்படவுள்ளது.

இதற்கு முன்னர் அதாவது கொரோனா 2ஆவது அலையின்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்து பேச்சு நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பின்னர் சந்திப்பு தொடரவில்லை. இந்நிலையிலேயே பேச்சை தொடர்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles