ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க முற்பட்டால், அந்த முயற்சியை தோற்கடிப்பதற்கு எதிரணிகள் கூட்டாக களமிறங்கும் என்று சட்டத்துறை பேராசிரியரான நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” மக்கள் அனுமதி ஆணையின்றி முன்னெடுக்கப்படும் ஆட்சியானது ஏதேச்சதிகார ஆட்சியாகவே அமையும். ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டுமெனில் உரிய காலத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
நுவரெலியாவில் வைத்து ஜனாதிபதி அண்மையில் ஆற்றிய உரையானது, தேர்தல் தொடர்பான அச்சத்தை உருவாக்கியுள்ளது.
ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு நாம் ஒத்துழைப்பு வழங்குவோம். ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க முடியாது. அவ்வாறான முயற்சியில் ஜனாதிபதி இறங்கினால் எதிரணிகளை இணைத்துக்கொண்டு அந்த முயற்சியை தோற்கடிப்போம்.” – எனவும் பீரிஸ் குறிப்பிட்டார்.










