இஸ்ரேலின் அத்துமீறலுக்கு ஜி7 அமைப்பு தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டும் என ஈரான் தெரிவித்துள்ளது.
கனடாவில் நடந்த ஜி7 மாநாட்டில், மத்திய கிழக்குப் பகுதிகளில் பதற்றம் தணிய வேண்டும் எனவும், தன்னை தற்காத்துக் கொள்வதற்கு இஸ்ரேலுக்கு உரிமை உண்டு எனவும் வலியுறுத்தப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பாக ஈரான் வெளிவிவகார அமைச்சு ,விசேட அறிக்கை ஊடாக கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
‘இஸ்ரேலின் அப்பட்டமான ஆக்கிரமிப்பு செயலுக்கு, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக உள்ள 3 நாடுகள் அடங்கிய ஜி 7 அமைப்பு தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டும்.
நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். பொது மக்களின் வீடுகள், பொதுச் சொத்துகள் மற்றும் அரசு கட்டமைப்புகள் மோசமாக சேதமடைந்துள்ளன.
மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ மையங்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றன. இந்த கொடூர ஆக்கிரமிப்பில் இருந்து தன்னை ஈரான் தற்காத்து கொள்கிறது. இதனைத்தவிர ஈரானுக்கு வேறு வாய்ப்பு ஏதும் இல்லை.
இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு உடனடியாக முடிவு கட்டினால் மட்டுமே இந்த பிராந்தியத்தில் நிலைமை ஸ்திரத்தன்மை பெறும்.” – எனவும் ஈரான் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளார்.