ஜி-7 மாநாடு ஆரம்பம் – ஜப்பானில் உச்சகட்ட பாதுகாப்பு!!

அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து ஆகிய 7 நாடுகள் அங்கம் வகிக்கும் ‘ஜி-7 ‘ அமைப்பின் உச்சி மாநாடு, ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் இன்று ஆரம்பமாகின்றது.

3 நாட்கள் நடைபெறுகிற இந்த மாநாடு 21 ஆம் திகதி நிறைவடையும்.

இந்த மாநாட்டில் உறுப்பு நாடுகளுடன் இந்தியா, தென்கொரியா, ஆஸ்திரேலியா, பிரேசில், வியட்நாம், இந்தோனேசியா, கொமோரோஸ், குக் தீவு ஆகிய 7 நாடுகளும் அழைப்பின்பேரில் கலந்து கொள்கின்றன.

குறித்த மாநாட்டில் ஹிரோஷிமா நகரம், பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

‘ஜி-7’ உச்சிமாநாட்டின்போது, அணுசக்தி பெருக்கத்தின் அபாயங்கள் குறித்து ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா பிரச்சினை எழுப்பி விவாதிக்க வகை செய்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஹிரோஷிமா நகரத்தின் மீது இரண்டாம் உலகப்போரின்போது, 1945-ம் ஆண்டு அமெரிக்கா அணுக்குண்டு வீசியது. இதில் அந்த நகரின் பெரும்பகுதி அழிந்ததும், 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்டதும் சோக வரலாறு. அந்த நகரில் இந்த அணுக்குண்டு வீச்சு நினைவு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிற தலைவர்கள் சென்று நினைவஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜி – 7 மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள ஆஸ்திரேலிய பிரதமர், ஜி – 7 நாடுகளின் தலைவர்களுடன் பேச்சு நடத்தவுள்ளார்.

Related Articles

Latest Articles