தமிழ்க் கட்சிகளின் ஒன்றிப்புக்கு அரசியல் மீள்கட்டுமான முயற்சி!

“பிரிந்து நின்று பயணிப்பது தமிழ்த் தேசிய அரசியலுக்குப் பாதகமான சூழலை ஏற்படுத்தும். அதனை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் மூலம் உணர்ந்துள்ளோம்.”

– இவ்வாறு தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பேச்சாளர் சுரேன் குருசாமி தெரிவித்தார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமைக் குழுக் கூட்டம் வவுனியா, இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. அதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த தேர்தலில் நாங்கள் பெற்றுக்கொண்ட பெறுபேறுகள், அதில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாகப் பேசியிருக்கின்றோம். குறிப்பாக எதிர்காலத்தில் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ்த் தேசியத்தைப்  பாதுகாக்கும் முகமாகத் தமிழ்த் தரப்பில் இருக்கக்கூடிய அனைவரும் ஒருமித்துப் பயணிப்பது தொடர்பான விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென்னிலங்கையின் அலை பெரிதாக வீசப்பட்டு எமது இளைஞர்கள் அள்ளுண்டு போனதை நாங்கள் அவதானித்திருக்கின்றோம். தமிழ்த் தேசியத்தை வலியுறுத்துகின்ற வாக்குகள் கணிசமான அளவு வழங்கப்பட்டிருந்தாலும் எங்களது கட்சிகளுக்கிடையில் இருந்த பிரிவினைகள் தென்னிலங்கைக் கட்சிக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. அது அந்தக் கட்சிக்கு அதிக ஆசனங்களைப்  பெறுவதற்கு வழிவகுத்துள்ளது.

ஆகவே, பிரிந்து நின்று பிரிவினையுடன் பயணிப்பது எமது இனத்தினுடைய இருப்புக்கும் எதிர்காலத் தமிழ்த் தேசிய அரசியலுக்கும் பாதகமான சூழலை ஏற்படுத்தும். அதனை இந்தத் தேர்தல் முடிவுகளின் மூலம் உணர்ந்துள்ளோம். இதனைச் சீர்செய்து கொண்டு தமிழ்த் தேசியப் பரப்பிலே பயணிக்கின்ற அனைவரையும் ஒருமித்துக்கொண்டு பயணிப்பது பற்றி கலந்துரையாடி இருக்கின்றோம்.

இது தொடர்பாக மாவட்ட ரீதியாகவும் எமது கட்சி உறுப்பினர்களோடு பேசுவதற்குத் தீர்மானித்துள்ளோம். இன்னும் பலமான வகையில் மீள்கட்டுமானத்தைச் செய்து எமது அரசியலை முன்னெடுக்கத் தயாராகவுள்ளோம்.

அத்துடன் கட்சிக்குள்  நடந்த பிரச்சினைகள் தொடர்பாக மாவட்ட ரீதியாகவும் கூட்டங்களை நடத்தி அவற்றை ஆராய்வதாகத் தீர்மானித்துள்ளோம்.” – என்றார்.

Related Articles

Latest Articles