மறைந்த எழுத்தாளர் சாகித்ய ரத்ன தெளிவத்தை ஜோசப் அவர்களின் ஆய்வு மற்றும் ஆவணவச் சேகரிப்பு பணிகளை கௌரவிக்கும் வகையிலும் அதனை ஊக்குவிக்கும் வகையிலும் பாக்யா பதிப்பகம் முன்னெடுக்கும் நிலைபேறான நினைவேந்தல் திட்டமாக ‘தெளிவத்தை ஜோசப் ஆய்வு மற்றும் ஆவணவகம்’ ( Theliwatte Joseph Reserch and Documentation Centre ) வத்தளையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தெளிவத்தை ஜோசப் அவர்களின் துணைவியார் திருமதி. பிலோமினாள் ருபெல்லா ஜோசப் அம்மையாரின் கரங்களினால் திறந்து வைக்கப்பட்ட நிலையத்தின் பணிகளை பாக்யா பதிப்பகம் முகாமைச் செய்யவுள்ளதாக அதன் நிறுவுனரும் எழுத்தாளருமான மல்லியப்புசந்தி திலகர் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்த அவர்,
“தெளிவத்தை ஜோசப் அவர்கள் தனியே எழுத்து, இலக்கியம் என்பதற்கு அப்பால் ஆய்வு மற்றும் ஆவண காப்பு பணிகளில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர். அவர் வாழ்ந்த காலத்திலேயே பல ஆயிரக் கணக்கான நூல் சேகரிப்புகளை கொழும்புத் தமிழ்ச்சங்கத்துக்கு வழங்கி இருந்தார். அவர் இறக்கும் தறுவாயில் அவரது சேகரிப்பில் இருந்த ஆயிரம் புத்தகங்களையும் அவரது விருதுகளையும் பாக்யா பதிப்பகத்தின் இந்த தெளிவத்தை ஆய்வகத்தில் காட்சிப்படுத்தியுள்ளோம். காட்சிப்படுத்திப்பட்டுள்ள நூல் விபரங்களை விரைவில் விபரமாக பதிவிடவுள்ளோம். அந்த நூல் தேவைப்படுவோர் நிலையத்துக்கு வருகைதந்து பிரதி எடுத்துச் செல்லக்கூடிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விரைவில் அவற்றை எண்ணிம்ப்படுத்தும் பணிகளையும் ஆரம்பிக்க உள்ளோம். ஆண்டுதோறும் அவரது நினைவாக ஆய்வுக்கட்டுரை போட்டிகளை நடாத்தும் ‘தெளிவத்தையார் விருது’ ஒன்றை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளோம்” என்றும் குறிப்பிட்டார்.
நிகழ்வின்போது கனடா ‘தாய்வீடு’ மாதப்பத்திரிகை 2022 டிசம்பர் மாதம் வெளியிட்டுள்ள ‘தெளிவத்தையார் சிறப்பிதழ்’ பிரதிகளும் வெளியிட்டு வைக்கப்பட்டன. நிலையத்தின் முகவரி 204-1/D, முதலாவது தளம், எவரிவத்தை வீதி, வத்தளை. தொலைபேசி 011-2982998. முன்பதிவுகொள்வதன் மூலம் நிலையத்தின் சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.










