” சர்வதேச கிரிக்கெட் பேரவை நமது நாட்டில் கிரிக்கெட்டை தடை செய்துள்ளது, இது தொடர்பாக இன்று காலை இ.எஸ்.பி.என்.அலைவரிசைக்கு சொந்தமான Crick Info இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிள்ளதன் பிரகாரம்,
ஸ்ரீலங்கா கிரிக்கட் பேரவையே இந்தத் தடைக்கான கோரிக்கையை முன்வைத்துள்ளது என்பது தெரிகின்றது.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாட்டில் ஒரு நிறுவனம் நாட்டிற்கு சேவை செய்ய உருவாக்கப்பட்டாலும், இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் தேச துரோகிகளே உள்ளனர் என்றும், அவர்கள் சகல பிரஜைகளுக்குமே துரோகமிழைத்துள்ளனர் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விமர்சித்தார்.
கொழும்பு மெரைன் கிரேன்ட் வரவேற்பு மண்டபத்தில் இன்று (11) இடம்பெற்ற சமூக ஊடக ஆர்வலர்கள் பிரதிநிதிகள் குழுவினருடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்தியன் பிரீமியர் லீக் போட்டிக்கான பங்கேற்பும் இழக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கப்படுவதாகவும்,தங்கள் மோசடி பரிவர்த்தனைகள் ,ஊழல் பண பரிவர்த்தனைகள் மற்றும் செயல்முறைகளை ஜனநாயகத்தை முன்னிலைப்படுத்தி பாதுகாத்துக்கொள்ள முற்படுகின்றனர் என்றும், ஜனநாயக முறையில் உருவாக்கப்பட்ட கிரிக்கெட் நிர்வாகத்திற்கு பல்வேறு தடைகள் வருவதாகவே சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அறிவித்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.
