2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை ஒரு நிலைபேறான அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதை இலக்காகக் கொண்ட மூலோபாயங்களையும், தேசிய கொள்கைகளையும் திட்டமிடுதல், நடைமுறைப்படுத்தல் கண்காணித்தல் மற்றும் மீளாய்வு செய்யும் நோக்கில் தேசிய கொள்கை ஆணைக்குழுவை அமைப்பதற்கான உத்தேச கொள்கைத் திட்டம் (07) கலந்துரையாடப்பட்டது.
குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையில் கூடியபோதே இவ்விடயம் குறித்து ஆராயப்பட்டது.
மேற்குறிப்பிட்ட தேசிய பேரவையின் உப குழுவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைய தேசிய கொள்கை ஆணைக்குழுவை அமைப்பதற்கான செயற்குழு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக தலைமையில் அமைக்கப்பட்டிருந்தது.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் பிரதமரின் செயலாளர் அநுர திஸாநாயக்க ஆகியோர் ஆணைக்குழு தொடர்பான கருத்தீட்டுப் பத்திரத்தை உபகுழுவிடம் சமர்ப்பித்தனர்.
இந்தக் கருத்தீட்டுப் பத்திரத்தின் பிரகாரம் அமைக்கப்படவுள்ள தேசிய கொள்கை ஆணைக்குழு அரசாங்கத்திற்குள் சட்டரீதியாக பிணைக்கப்பட்ட நிறுவங்களின் உயர்மட்டத்தில் செயற்படும். பகுப்பாய்வு செய்து கொள்கைகளை வகுத்தில் மற்றும் கொள்கை ரீதியான பரிந்துரைகளை வழங்குதல், 2023-2048 ஆண்டுகளிடையே தேசிய அபிவிருத்திக் கொள்கைக் கட்டமைப்பு, தேசிய அபிவிருத்தித் திட்டம் மற்றும் நடுத்தர குறுகிய காலகட்ட உப தேசிய அபிவிருத்தித் திட்டங்களை உருவாக்குதல், அபிவிருத்தித் திட்டங்களுக்குத் தேவையான வளங்களுக்குரிய பொது மற்றும் தனியார் மூலங்களை அடையாளம் காணுதல் மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களையும் கருத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கான பயனுறுதி வாய்ந்த மூலவளப் பங்கீட்டை உறுதிப்படுத்தல், அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களையும் கருத்திட்டங்களையும் மதிப்பீட்டு முன்னுரிமைப்படுத்தல்,
அபிவிருத்தித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுதலை கண்காணித்து மதிப்பீடு செய்தல், தேசிய மற்றும் உப தேசிய மட்டங்களிலான முகவர்களை ஒருங்கிணைத்தலும் கூட்டிணைத்தலும் இதன் பணிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதன்படி, ஆணைக்குழுவின் செயற்பாடுகளை நிறைவேற்றுவதற்காக ஆணைக்குழு பணியகம் ஒன்றை நிறுவுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன், அதன் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக வழிநடத்தல் குழுவும் நிறுவப்படவுள்ளது. அதுமட்டுமல்லாமல்,
அரசியலமைப்பின் 04, 27 மற்றும் 148 வது உறுப்புரைகளின் கீழ் பாராளுமன்றம் தனது அதிகாரங்களைச் செயற்படுத்தும் வகையில் பாராளுமன்றத்திற்கும், அதன் உறுப்பினர்களுக்கும் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குவதற்கும் சட்டபூர்வமாகப் பிணைக்கப்பட்ட வசதிப்படுத்துனராக தேசிய கொள்கை ஆணைக்குழு செயற்படும்.
இந்த ஆணைக்குழுவின் நீண்டகால கொள்கைத் திட்டமிடலில் 2023-2048 தேசிய அபிவிருத்திக் கொள்கை, தேசிய பௌதிகத் திட்டம் என்பன உள்ளடங்கவிருப்பதுடன், நடுத்தர காலகட்டத்துக்கான ஐந்துவருடத்திட்டம், அரச முதலீட்டு நிகழ்ச்சித் திட்டம் மற்றும் துறைசார் திட்டங்கள் என்பன ஆணைக்குழுவின் நடுத்தர கால கொள்கைத் திட்டமிடலில் அடங்குவதுடன், வருடாந்த வரவுசெலவுத்திட்டம், மாகாண வருடாந்த வரவுசெலவுத்திட்டம் என்பன குறுகிய கால கொள்கைத் திட்டமிடலில் அடங்கும்.
இந்தக் கருத்தீட்டுப் படிவத்தை தேசிய பேரவையில் விரைவில் சமர்ப்பித்துத் தேவையான எதிர்கால பணிகளுக்கு நடவடிக்கை எடுப்பதாக இங்கு கருத்துத் தெரிவித்த உப குழுவின் தலைவர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வஜிர அபேவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, பேராசிரியர் ஷிரந்த ஹீன்கெந்த, கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.










