தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் திருவிழாக்களுக்கு தடையா?

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் நாட்டின் கலாசாரம் அழிக்கப்படும் எனக் கூறப்படுவது அப்பட்டமான பொய்யாகும். எமது ஆட்சியின்கீழ் அனைத்து இன மக்களினதும் அடையாளம், ஆன்மீகம் மற்றும் கலாசார உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

ஜே.வி.பி. தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அநுரகுமார திஸாநாயக்க கூறியவை வருமாறு ,

” தேசிய மக்கள் சக்திக்கான மக்கள் ஆதரவு பெருகிவருவதால் சில அரசியல் கட்சிகளுக்கு பீதி ஏற்பட்டுள்ளது. அதனால் எமது அணிக்கு எதிராக திட்டமிட்ட அடிப்படையில் சேறுபூசும் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால், பெரஹெர நடத்துவதற்கு தடைவிதிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஐக்கிய மக்கள் சக்தி மேடையில் வைத்து குறிப்பிடுகின்றார். இந்த அறிவிப்பை விடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் எமது அணியில் அரசியல் தஞ்சம் கோரினார். 37 தடவைகள் கெஞ்சினார். ஆனாலும் நாம் ஏற்கவில்லை.

எமது நாட்டில் பல்லின மக்கள் வாழ்கின்றனர், அவர்களுக்கென தனித்து அடையாளம் உள்ளது, மத மற்றும் கலாசார உரிமைகள் உள்ளன. அவற்றை நாம் பாதுகாப்போம். மத விழாக்கள் பாதுகாக்கப்படும். எதிர்கால தலைமுறையினருக்காக பாரம்பரியங்களை நாம் நிச்சயம் பாதுகாப்போம்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் அது நடக்கும், இது நடக்கும் மக்கள் மத்தியில் அச்சநிலை உருவாக்கப்பட்டுவருகின்றது. எமது நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது எதிர்தரப்பு ஆதரவாளர்கள் தாக்கப்படுவதும், அவர்களின் சொத்துகள் சேதமாக்கப்படுவதுமான அசிங்கமான அரசியல் கலாசாரம் நிலவியது. வாக்குரிமை என்பது ஜனநாயக உரிமை. அதனை யாருக்காகவும் வழங்கும் உரிமை மக்களுக்கு உள்ளது. எனவே, எமது ஆட்சியில் யாருக்கு வாக்களித்திருந்தாலும் வாக்காளர்கள் பாதுகாக்கப்படுவார்கள்.

சொத்துகள் சுவீகரிக்கப்படும் என்றெல்லாம் கூறுகின்றனர். அவ்வாறு எதுவும் நடக்காது.” – என்றார்.

Related Articles

Latest Articles