தையிட்டிக் கிராமத்தில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணியை ஆக்கிரமித்து விகாரை அமைக்கப்பட்டுள்ளது எனக் கூறி, அந்த நிலத்தை மீள ஒப்படைக்குமாறு கோரி நில உரிமையாளர்கள் நீண்டகாலமாகப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இதற்கு முன்னதாக இக்காணிகளை அளவீடு செய்ய முயற்சித்த போது, அதற்கு விகாராதிபதி கடும் எதிர்ப்புத் தெரிவித்து அனுமதி மறுத்திருந்தார். இதன் காரணமாக நில அளவீட்டுப் பணிகள் இடைநடுவில் கைவிடப்பட்டிருந்தன.
இந்த முறை நில அளவீட்டுப் பணிகளை எவ்விதத் தடையுமின்றி முன்னெடுப்பதற்காக, மாவட்ட நில அளவைத் திணைக்கள உத்தியோகத்தர்களுடன் இணைந்து கொழும்பிலுள்ள நில அளவைத் திணைக்களத்தின் தலைமைப் பணிமனை அதிகாரிகளும் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளனர்.
இரண்டு நாள்களாக இடம்பெறவுள்ள இந்த அளவீட்டுப் பணிகளின் ஊடாக, ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலங்கள் சரியாக அடையாளப்படுத்தப்பட்டு, நில உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.










