தொடர்ந்து மின்வெட்டு அமுல்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானம்!

தொடர்ந்தும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டால் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அவதூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று அறிவித்தது.

தொடர்ந்தும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்ற நிலையிலேயே ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, பரீட்சை காலத்தில் மின்வெட்டுகளை விதிக்க மாட்டோம் என தொடர்புடைய அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.

எவ்வாறாயினும், உறுதியளிக்கப்பட்ட போதிலும் இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, ஜனவரி 26 ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதை தாம் அனுமதிக்கவில்லை என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழு வழங்கிய கட்டளைக்கு அமைய, குறித்த காலப்பகுதியில் தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை மேற்கொள்ளுமாறு, மின்சார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரது கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, வழங்கப்பட்ட கட்டளைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் 21 ஆவது சரத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்க முடியும் என மனித உரிமைகள்  ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

Related Articles

Latest Articles