ஜீவன் தொண்டமானின் கண்டனத்தையடுத்து லெதன்டி–மால்ப்ரோ தோட்ட தொழிலாளரிடம் மன்னிப்புக் கோரிய தோட்ட முகாமையாளர்!
ஹட்டன் பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட லெதன்டி தோட்டத்தின் மால்ப்ரோ பிரிவில் இம்மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக தீர்வினைப் பெறும் நோக்கில் கலந்துரையாடலொன்று இன்று (26) ஹட்டன் தொழில் தினைக்களத்தில் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) பிரதித்தலைவர் கணபதி கனகராஜ், ஹட்டன் மாநில சிரேஷ்ட இயக்குனர்/உத்தியோகஸ்த்தர் விஸ்வநாதன், தோட்ட முகாமையாளர் மஞ்சுல சமரகோன், பிரதி முகாமையாளர் ரத்வத்த சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மால்ப்ரோ தோட்டத்தின் பிரதி முகாமையாளர், குறித்த தோட்டத் தொழிலாளர் ஒருவரிடம் தகாத வார்த்தைகளால் பேசியமை தொடர்பில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் அன்றைய தினமே பாராளுமன்றத்தில் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், உரிய முறையில் மன்னிப்புக் கோர வேண்டுமென வலியுறுத்தியிருந்தார்.
அதன் அடிப்படையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது, மொழி தொடர்பான தவறுதலால் இவ்வாறு நடந்ததாகத் தெரிவித்து, சம்பந்தப்பட்ட தோட்டத் தொழிலாளரிடம் தோட்ட முகாமையாளர் நேரடியாக மன்னிப்புக் கோரினார். மேலும், இனிமேல் இவ்வாறான தவறுகள் இடம்பெறாத வகையில் நடந்து கொள்வதாகவும் அவர் வெளிப்படையாக உறுதியளித்தார்.
இதனையடுத்து, ஜீவன் தொண்டமான் எம்.பியுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட தோட்ட முகாமையாளர், மீண்டும் மன்னிப்புக் கோரியதுடன், தொழிலாளர்களிடம் மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும், இத்தகைய தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டுமென ஜீவன் தொண்டமான் வலியுறுத்தினார்.
மேலும், தோட்ட நிர்வாகம் தொடர்பாக தொழிலாளர்கள் முன்வைத்த பிரச்சினைகளுக்கு தோட்ட முகாமையாளரால் சாதகமான பதில்கள் வழங்கப்பட்டமையால், இந்த கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, தொழிலாளர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் க்கு தமது நன்றியைத் தெரிவித்தனர்.










