தோட்டத்தொழிலாளிக்கு தலைவர் பதவியை வழங்கிய ‘தொழிற்சங்க துறவி’ வி.கே. வெள்ளையன்! 105 ஆவது ஜனன தினம் இன்றாகும்
📷பெயர்- வி.கே. வெள்ளையன்.
📷தந்தை – காளிமுத்து.
📷தாய் – பேச்சியம்மாள்.
📷 பிறந்த திகதி – 1918 நவம்பர் 28.
📷சொந்த ஊர் – பொகவந்தலாவை, முத்துலட்சுமி தோட்டம்.
📷ஆரம்பகல்வி – பொகவந்தலதாவை கெம்பியன் தோட்டப் பாடசாலை, பொகவந்தலாவை சென். மேரிஸ் மகா வித்தியாலயம்.
📷உயர்கல்வி – கண்டி திரித்துவக் கல்லூரி.
(கண்டி திரித்துவக் கல்லூரியில் ரக்பி அணி தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.)
📷ஆரம்ப தொழில் – கூட்டுறவு சங்க முகாமையாளர்.
(இவரை தோட்ட துரையாக்க வேண்டும் என்பதே கங்காணி குடும்பத்தின் கனவாக இருந்தது. எனினும், பொலிஸ் அதிகாரியாகவே வெள்ளையன் விரும்பினார். அதற்கான விண்ணப்பமும் தாக்கல் செய்துள்ளார். எனினும், குடியுரிமை பறிப்பால் அந்த கனவு நிறைவேறவில்லை எனக் கூறப்படுகின்றது.)
வெள்ளையன் கடந்துவந்த பாதை……..
18ஆம் நூற்றாண்டில் அனைத்துலக மட்டத்தில் தொழிலாளர் புரட்சி வெடித்தது. எனினும், மலையக மக்கள் தொடர்ந்தும் கொத்தடிமைகளாகவே நடத்தப்பட்டனர். உரிமைகள் மறுக்கப்பட்டு – ஒடுக்கப்பட்டனர்.
இவ்வாறு அடக்குமுறை தலைவிரித்தாடியதால் – மலையகத்திற்கும் தொழிற்சங்க கட்டமைப்பு அவசியம் என்ற கருத்தாடலை மலையக தொழிற்சங்க தந்தை நடேசய்யர் உருவாக்கினார். எதிர்ப்பலைகளுக்கு மத்தியிலும் தொழிலாளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இவ்வாறு அத்திரவாரம் இடப்பட்டு, அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாலேயே இந்தியாவின் தலையீட்டுடன் தற்போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸாக இயங்கும், இலங்கை – இந்திய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது.
இலங்கை, இந்திய காங்கிரஸ் 1939 ஆம் ஆண்டு உதயமானது. அதன் கன்னி மாநாடு 1940 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் திகதி கம்பளையில் பெருமெடுப்பில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
சௌமியமூர்த்தி தொண்டமான், மலையக காந்தியென புகழப்படும் இராஜலிங்கம் ஆகியோர் மட்டுமல்ல இ.தொ.காவின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஏனைய சில தலைவர்களும் இருந்தனர். 1942 ஆம் ஆண்டுக்கு பின்னரே காங்கிரசுடன் வெள்ளையனுக்கு தொடர்பு ஏற்பட்டது.
அதன்பின்னர் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஆதிக்கம், மலையகமெங்கும் கோலோச்சுவதற்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர். இ.தொ.கா என்ற தொழிற்சங்கப் படையணியின் தளபதியாக வலம்வந்தவர். ஊடகம் வாயிலாகவும் சமூக மாற்றத்துக்கான எழுச்சியை விதைத்தவர்.
1965 ஆம் ஆண்டு வெள்ளையனுக்கு கிடைக்கவேண்டிய நியமன எம்.பி.பதவியை தனது சகா ஒருவருக்கு , தொண்டமான் பெற்றுக்கொடுத்தார் என கூறப்படுகின்றது.
இவ்வாறு பல வழிகளிலும் ஓரங்கட்டப்பட்டாலும், கொள்கைரீதியான முரண்பாடுகளாலும் முக்கிய உறுப்பினர்கள் சகிதம், இ.தொ.காவிலிருந்து வெளியேறிய வெள்ளையன், 1965 இல் தொழிலாளர் தேசிய சங்கத்தை நிறுவினார். தலைமைப் பதவியை தோட்டத் தொழிலாளர் ஒருவருக்கு வழங்கிவிட்டு, பொதுச்செயலாளராக செயற்பட்டார்.
காலப்போக்கில் மேலும் பலர் இணைந்தனர். குறிப்பாக ‘வீடற்றவன் நாவல்’ தந்த சி.வி. வேலுபிள்ளையின் வருகையானது தொழிலாளர் தேசிய சங்கத்தின் வெற்றி பயணத்துக்கு வலுசேர்த்தது. சி.வி. வேலுப்பிள்ளையும், வெள்ளையனும் 1970 பொதுத்தேர்தலில் போட்டியிட்டனர். எனினும், வெற்றிபெறமுடியவில்லை.
தொழிலாளர் ஒருவருக்கு தலைமைப் பதவி வழங்கி – தொழிலாளர் நலனுக்காகவே வாழ்ந்த ஒரு தலைவனை இந்நாளில் நினைவுகூருவதில் பெருமையடைகின்றேன்.
இவரை நினைவுகூரும் வகையில் பொகவந்தலாவை பகுதியில் அமைக்கப்பட்ட தனி வீட்டு திட்டமொன்றுக்கு ‘வெள்ளையன் புரம்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் தேசிய சங்கமானது இன்று இரண்டு எம்.பிக்களையும், உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களையும் தன்வசம்கொண்டு செயற்படுகின்றன. அதன் தலைவராக திகாம்பரம் செயற்படுகின்றார். தொழிலாளர் தேசிய சங்கத்தின் அரசியல் கிளையாக தொழிலாளர் தேசிய முன்னணி செயற்படுகின்றது. சின்னம் அரிவாள்.
ஆர்.சனத்