மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர், சமூக செயற்பாட்டாளர் விவேக் காலமானார்.
இன்று அதிகாலை 4.30 மணிக்கு இறந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
என்ன நடந்தது?
மாரடைப்பு காரணமாக நடிகர், சமூக செயற்பாட்டாளர் விவேக் நேற்று காலை சென்னை, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அதற்கு முன் தினம் தான் அவர் கொரோனாவுக்கான தடுப்பூசி போட்டுக் கொண்டிருந்தார்.
அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கொரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்கவே தனியார் மருத்துவமனையைத் தவிர்த்துவிட்டு அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். தடுப்பூசி போட்டுக்கொண்டால் கோவிட்-19 தொற்று ஏற்படலாம். ஆனால், அந்தத் தொற்று உயிரைக் கொல்லாமல் இருக்கத் தடுப்பூசி உதவும்” என்று தெரிவித்ததோடு, தடுப்பூசி போட்டதற்குப் பிறகு தனக்கு எந்தவித பக்கவிளைவும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்து இருந்தார்,
இந்த நிலையில், விவேக்கிற்கு மரடைப்பு ஏற்பட்டதால், தடுப்பூசி போட்டுக் கொண்டதும் தான் மாரடைப்பு வந்தது என்று சந்தேகம் எழுப்பியது.
எக்மோ கருவி உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
தடுப்பூசிதான் காரணமா?
எனினும், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவமனை நிர்வாகம் தடுப்பூசிக்கும் விவேக்கின் மாரடைப்புக்கும் தொடர்பு இல்லை என விளக்கம் அளித்தது.