நடிகர் நாகபாபுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்றுக்கு நடிகர், நடிகைகளும் சிக்கி வருகிறார்கள். ஏற்கனவே நடிகர்கள் அமிதாப்பச்சன், விஷால், அபிஷேக் பச்சன், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜூன், சுமலதா. இயக்குனர் ராஜமவுலி உள்ளிட்ட பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமாகி மீண்டனர்.
இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் நாகபாபுவுக்கும் தற்போது கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இவர் தமிழில் லிங்குசாமி இயக்கிய வேட்டை, மற்றும் விழித்திரு, இந்திரஜித் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இவர் பிரபல நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர் என்பதும் விஜய்சேதுபதியின் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள நிஹாரிகாவின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நாகபாபு கலந்து கொண்டார்.
அதன்பிறகு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. மருத்துவர்கள் ஆலோசனையோடு வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறார்.