நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் இருப்பதால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை வந்தால்கூட அது சவாலாக அமையாது என்று ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும் என எதிரணிகளால் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன கூறியவை வருமாறு,
‘ சபாநாயகரால் உரிய விளக்கமளிக்கப்படவுள்ளது. அவர் விரைவில் அந்த அறிவிப்பை விடுப்பார். அந்த அறிவிப்பு வெளியான பின்னரே அடுத்தக்கட்டம் பற்றி கூற முடியும்.
நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்திக்கு 159 உறுப்பினர்கள் உள்ளனர். எனவே, நம்பிக்கையில்லாப் பிரேரணை எதற்கு? அவ்வாறு வந்தால் என்ன நடக்கும் என்பது பற்றி எதிரணிகள் சிந்தித்தால் நல்லது.” – என்றார்.
அதேவேளை, ‘ எதிரணிகள் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவரட்டும். கதைப்பதற்கு ஒன்றும் இல்லை என்பதால்தான் மரண சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் என சான்றிதழ்களை தேடி அழைக்கின்றனர் எதிரணியினர்.” – என்று அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
