உலகின் அமைதி, ஒற்றுமை, நீடித்த வளர்ச்சியில் இந்தியாவின் வகிபாகம் என்ன?
உலக அரங்கில் இந்தியா தனது வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்ய ஆரம்பித்துள்ளது. உலகில் பொருளாதார நெருக்கடியொன்று ஏற்பட்டுள்ளது. ரஸ்ய – உக்ரெய்ன் போர் இதற்கு வழிவகுத்தது. இருந்தாலும் இந்தியாவின் வலுவான பொருளாதாரக் கொள்கையும், வெளியுறவுக் கொள்கையும் உலக அரங்கில் தனது இருப்பையும், வளர்ச்சியையும் பதிவுசெய்யும் சந்தர்ப்பத்தை இந்தியா பெற்றுள்ளது. இதில் முக்கியமாக அண்மையில் இந்தோனேசியாவின் பாலி நகரில் நடந்த 17ஆவது ஜி-20 மாநாட்டின் தலைமைத்துவம் அமைகிறது.
உலகில் தற்போது பெரும்பாலான நாடுகள் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளது. அடுத்த வருடம் உணவு நெருக்கடியொன்று ஏற்படக் கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியிருக்கிறது. இதற்காக நாடுகளுடனான நட்புறவை வளர்த்துக் கொண்டு பயணித்தால் மட்டுமே உலகின் திறந்தபொருளாதாரக் கொள்கையுடன் முன்நோக்கிப் பயணிக்கக் கூடியதாக இருக்கும்.
அண்மையில் ஜி-20 மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றிருந்தார். அமைதி, ஒற்றுமை, நீடித்த வளர்ச்சி ஆகியன உலகளாவிய நலன்சார்ந்த சவாலான விடயங்களுக்கு இந்தியாவிடம் தீர்வு உள்ளது என இந்தியப் பிரதமர் அறிவித்திருந்தார்.
ஜி20 தலைமைத்துவத்தின் கருப்பொருள் ‘ஒரு பூமி ஒரு குடும்பம் ஒரு எதிர்காலம்’ என்பதாகும். இந்த வாசகம் புராதன சமஸ்கிருத நூலான உபநிடதத்திலிருந்து பெறப்பட்டுள்ளது.
இக்கருப்பொருளானது மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் நுண்ணுயிர்கள் ஆகியவையும் அவற்றுடன் தொடர்புடைய ஏனைய உயிரினங்கள் உட்பட சகல உயிர்களினது பெறுமதியினையும் அவை பூமியிலும் பரந்த இப்பிரபஞ்சத்திலும் கொண்டிருக்கும் தொடர்பினையும் உறுதிப்படுத்துவதாக அமைகின்றது.
இந்தியா ஜி-20 தலைமைத்துவத்தைப் பெற்றிருப்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஜி-20 தலைமைத்துவம் இந்தியாவிற்கு கிடைத்த மிகப் பெரிய சந்தர்ப்பம் என்றும் என்று மாதமொரு முறை வானொலி மூலம் மக்களுடன் உரையொற்றும் நிகழ்ச்சியொன்றில் இந்தியப் பிரதமர் தெரிவித்திருந்தார்.
உலகளாவிய நலன் சார்ந்த விசயங்களில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும். அமைதி, ஒற்றுமை அல்லது நீடித்த வளர்ச்சியாக இருக்கும். அதனுடன் தொடர்புடைய விசயங்களுக்கு இந்தியாவிடம் தீர்வு உள்ளது. நாம் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே வருங்காலம் என்ற கருப்பொருளை கொண்டிருக்கிறோம் என்று இந்தியப் பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
சோவியத் ஒன்றியத்தின் சிதறல் முதல் இறுதியாக ரஸ்ய – உக்ரெய்ன் போர் வரையில் உலக அரசியல் அரங்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதை அனைவரும் அறிவோம். ஆனால் ரஸ்ய – உக்ரெய்ன் போரின் பின்னர் ஐரோப்பிய தலைமைத்தும் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது. தற்போது இந்த உலக தலைமைத்துவம் ஆசியாவை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில் இந்தியப் பிரதமரின் உரையானது மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
குறிப்பாக அமைதி, ஒற்றுமை, நீடித்த வளர்ச்சி என்பன உலக நாடுகள் அனைத்திற்கும் தேவையான ஒன்றாக இருக்கிறது. ஜனநாயகத்தை வலியுறுத்தும் அனைத்து நாடுகளும் இதனையே விரும்புகின்றன. எனவே, இந்தியாவின் இந்த அறிவிப்பும், ஏனைய நாடுகளுடனான வெளியுறவுக் கொள்கையும், கொடுக்கல் வாங்கல்களும் இந்தியாவை உலக அரங்கில் வலுப்படுத்தியுள்ளது.
எளிதான, சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை!
ஒரு நாட்டின் கொள்கைத் தீர்மானங்கள், பிரச்சினைகளைக் கையாளும் போது அளவிடக்கூடியதாக இருக்கும். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் திறனுக்கு அண்மைக்கால அரசியல் நிகழ்வொன்றை சிறந்த உதாரணமாக அமைந்தது.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் எளிதாகவும், சுதந்திரமாகவும் இருக்கிறது என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பாராட்டியிருந்தார். இந்தியா – பாகிஸ்தான் என்றவுடன் ஒரு எதிர்ப்பு உணர்வு தெரியாமலேயே அனைவருக்கும் தொற்றிக் கொள்கிறது. கிரிக்கெட் போட்டிகளிலும் சரி, எல்லைப் பிரச்சினைகளிலும் சரி இந்த எதிர்ப்பு உணர்வு அதிகமாகவே இருக்கிறது. இந்தியாவுடன் எப்போதும் ஏட்டிக்குப் போட்டியாக இருக்கும் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் ஒருவர், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளைப் பாராட்டியிருப்பதே இங்கு முக்கியமானது. ஜி – 20 மாநாட்டில் இந்தியா எடுத்துக் கொண்ட கருப்பொருள், அதற்கான இந்தியாவின் தலைமைத்துவம் ஆகியவற்றையும் இதனுடன் இணைத்துப் பார்க்கலாம்.
உக்ரெய்ன் மீது ரஸ்யா போர் தொடுத்ததால் ரஸ்யா மீது பல தடைகளை மேற்குலகம் விதித்தது. எண்ணெய் வாங்கக் கூடாது என்ற கட்டுப்பாடுகளை அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும் கொண்டுவந்தன. ஆனால் இந்தியா, ரஸ்யாவுடனான கொடுக்கல் வாங்கல்களைச் செய்தது. அதுவும் மேற்குலக நாடுகளையும் பகைத்துக் கொள்ளாமல் இந்தப் பணியை இந்தியா செய்தது.
இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையான அணிசேரா கொள்கையில் உறுதியாக இருக்கிறது. இது இந்தியாவின் எளிதான மற்றும் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கைக்குச் சிறந்த உதாரணமாகும். நவீன உலகம் நொடிக்கு நொடி மாறிவரும் நிலையில், இந்தியா இந்தக் கொள்கையில் உறுதியாக இருக்கிறது. இதனால் ஜி 20 மாநாட்டில் ஏற்றிருக்கும் தலைமைத்துவத்தையும், கருப் பொருளையும் இந்தியா வெற்றிகரமாக முன்னெடுக்கும் என்பதற்கு மாற்று கருத்து இருக்காது.