” நாட்டி தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தீரும்வரை, நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்கமாட்டேன்.” –
இவ்வாறு இன்று அதிரடி அறிவிப்பொன்றை விடுத்தார் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினரும், மொட்டு கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சாமர சம்பத் தசநாயக்க.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், சபைக்கு தெரியப்படுத்தாமல் – சபையின் அனுமதியை பெறாமல் தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் சபை அமர்வுகளில் பங்குகேற்காவிட்டால், அவர் நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்துவிடுவார்.
எனவே, இப்பிரச்சினை மூன்று மாதங்களுக்குள் தீர்க்கப்பட வேண்டும் என்பதே சாமர சம்பத் தசநாயக்கவின் கோரிக்கையாக அமைந்தது.
நாடாளுமன்றம் இன்று (08.04.2022) முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதன்போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.
” நான் பிரதமர் பதவியை வகிப்பதற்கு இங்கு வரவில்லை. ஊவா மாகாண முதல்வர் பதவியை வழங்கினால் அதனை செய்யக்கூடியதாக இருக்கும்.
எனக்கு ஆங்கிலம் தெரியாது, சர்வதேச தொடர்பும் இல்லை. ஆனால் நாட்டைக் கட்யெழுப்பவே நாடாளுமன்றம் வந்ததாக ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார். இதனை செய்யவே ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனவும் சாதாரண எம்.பியாக வந்துள்ளார். எனவே, அவர்களும் பொறுப்புக்கூறவேண்டும்.
2015 ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றார். மஹிந்த தோல்வி அடைந்தார். ஆனால் புனித பூமிக்கு யாத்திரை செல்வதுபோல, ஆயிரக்கணக்கான மக்கள் மஹிந்தவின் வீட்டுக்கு அணிவகுத்து சென்றனர். எவரும் வெற்றிபெற்ற மைத்திரியின் வீட்டுக்கு வரவில்லை.
அன்று அவ்வாறு செயற்பட்ட மக்கள், இன்று மஹிந்தவின் தங்காலை வீட்டை சுற்றிவளைக்கும் நிலைமை உருவாகியுள்ளது. எனவே, நாட்டு மக்களின் மனநிலைமையை புரிந்துசெயற்பட வேண்டும். இப்பிரச்சினை தீரும்வரை சபைக்கு வரமாட்டேன்.” – என்றார்.
சாமர சம்பத் சதநாயக்க ஊவா மாகாண முதல்வராக செயற்பட்டவர். பதுளையில் தமிழ் பாடசாலை அதிபர் ஒருவரை முழந்தாளிட வைத்து சர்ச்சையிலும் சிக்கியவர்.