நாளை கூடுகிறது பாராளுமன்றம்! 11 ஆம் திகதி ஆறுமுகன் தொண்டமானுக்கு அனுதாபம்!!

பாராளுமன்றம் நாளை (8) பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.

சபாநாயகர் அறிவிப்பு, மனுதாக்கல் உட்பட பிரதான சபை நடவடிக்கை நிறைவடைந்த பின்னர் விவாதம் ஆரம்பமாகும்.

இதன்படி மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை, நிதி அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை மற்றும் 2020 வருட நடுப்பகுதியில் அரசாங்கத்தின் நிதி நிலைமை தொடர்பான அறிக்கை என்பன பற்றி சபை ஒத்திவைப்பு விவாதம் நடத்தப்படவுள்ளது.

செப்டெம்பர் 09 ஆம் திகதி உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான 09 ஒழுங்குவிதிகள், மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழ் 10 கட்டளைகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

செப்டெம்பர் 10ஆம் திகதி துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழான 06 கட்டளைகள், சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 03 ஒழுங்குவிதிகள் மற்றும் சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 06 தீர்மானங்கள் என்பன விவாதிக்கப்படவுள்ளன.

செப்டெம்பர் 09ஆம் திகதி பிற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 7.30 மணி வரையும், செப்டெம்பர் 10ஆம் திகதி முற்பகல் 10.30 மணி முதல் பிற்பகல் 7.30 மணிவரையும் அமர்வுகள் நடைபெறும்.

செப்டெம்பர் 11ஆம் திகதி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் தொடர்பான அனுதாபப் பிரேரணை விவாதம் நடைபெறவுள்ளது.

அன்றையதினம் முற்பகல் 10.30 மணி முதல் 6.30 மணிவரை அமர்வுகள் இடம்பெறவிருப்பதுடன், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இவ்விவாதத்தில் உரையாற்றவுள்ளனர்.

Related Articles

Latest Articles